வங்கக் கடலில் 8ம் தேதி உருவாகிறது மாண்டஸ் புயல்: தமிழகத்தில் மழை கொட்டும்

சென்னை: வடகிழக்கு பருவமழை தற்போது குறைந்துள்ள நிலையில் 8ம் தேதி வங்கக் கடலில் புயல் (மாண்டஸ்) உருவாகும், அதன் காரணமாக  தமிழகத்தில் மிக கனமழை பெய்யும் என்றும், அந்த புயல் வலுவிழந்த நிலையில் கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் தரைப்பகுதியில் பெரிய அளவில் பாதிப்பு இருக்காது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கை:

மன்னார்  வளைகுடா மற்றும் குமரிக் கடல் பகுதியில் நீடிக்கும் மெல்லிய காற்று சுழற்சி மற்றும் தென்சீனக் கடல் பகுதியில் இருந்து அந்தமான் கடல் பகுதிக்கு வந்துள்ள காற்றுசுழற்சி, இவை இரண்டையும் ஒன்றிணைத்த இணைப்பு சுழற்சியின் காரணமாக தமிழகத்தில் நேற்று பல்வேறு இடங்களில் மழை பெய்தது. நேற்று முன்தினம் தென்மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஆங்காங்கே நல்ல மழையை கொடுத்தது. மேலும் கோவை, ஈரோடு மாவட்டங்களிலும் நல்ல மழை பெய்தது. நேற்று முன்தினம் நள்ளிரவு நேரத்தில் கடலூர், புதுச்சேரியிலும் நல்ல மழை பெய்துள்ளது. அதன் தொடர்ச்சியாக லேசானது முதல் மிதமான மழை பெய்து வந்தது.

இந்நிலையில், நேற்று மதியம் மற்றும் மாலையில் அதிக மழை  பெய்தது. தரைப்பகுதியில் நிலவும் வெப்ப நிலை காரணமாகவும், கடல் பகுதியில் இருந்து வீசும் காற்று காரணமாக வட மாவட்டங்களில்  இன்று மழை பெய்யும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. அதாவது கடலூர், விழுப்புரம், புதுச்சேரியில் பெய்து கொண்டு இருக்கின்ற மழை படிப்படியாக வடக்கு நோக்கி நகர்ந்து வட கடலோர மாவட்டங்களில் பெய்யத் தொடங்கும்.  பின்னர் அனைத்து மாவட்டங்களிலும் மழை பெய்யும் என்று கணிக்கப்பட்டதால் நேற்று மாலையில்  இருந்தே மழை பெய்யத் தொடங்கியது.

இன்று வடகடலோர மாவட்டங்களில் மழை குறைவாக இருக்கும். டெல்டா மாவட்டங்களிலும் மழை குறையும், கன்னியாகுமரி திருநெல்வேலி, மாவட்டங்களில் இன்று இரவு வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது. திங்கள், செவ்வாய், புதன் கிழமைகளில் மழை குறைந்தாலும், அதற்கு பிறகு தமிழகத்தில் அதிக மழை பெய்யும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. அந்தமான் பகுதிக்கு வந்துள்ள காற்று சுழற்சி, இன்று காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறும். 6ம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும், 7ம் தேதி ஆழ்ந்த காற்றழுத் தாழ்வு மண்டலமாகவும் மாறும் பின்னர் அது மேலும் வலுப்பெற்று புயலாக மாறும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி புயலாக மாறினால் அந்த புயலுக்கு ‘மாண்டஸ் ’என்று பெயரிடப்பட்டுள்ளது.

இது முதலில் மேற்கு நோக்கி நகர்ந்து வந்து வடஇலங்கையை நெருங்கி வந்து தரைக்காற்றை கடல் பகுதியை நோக்கி இழுக்கும். இந்த புயல் கரையைக் கடக்காது, தரைப் பகுதியில் இருக்கும் காற்றை இழுக்கும் நிலையில் வலுவிழந்து, நன்கமைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாறி கரையைக் கடக்கும். அதற்கு முன்னதாக கடலில் இரண்டு நாட்கள் அந்த புயல் நிலை கொண்டு தமிழகத்துக்கு மிக கனமழையை கொடுக்கும்.

7ம் தேதி வடஇலங்கை  பகுதியில்  மிக கனமழை பெய்யும். தமிழகத்தில்  ராமநாதபுரம்,  புதுக்கோட்டை,  தஞ்சை,  திருவாரூர்,  நாகப்பட்டினம்,  காரைக்கால்,  மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர், திருச்சி, ஆகிய பகுதிகளில் 8ம் தேதி  கனமழை முதல் மிக கனமழை பெய்யும். அதே நேரத்தில் கடலில் மாண்டஸ் புயல் நிலை கொண்டு இருந்தாலும் வலுவிழக்கும், தரைக் காற்றின் காரணமாக தரைப் பகுதிக்கு நெருங்கி வந்து செயலிழந்து காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாறும்.

அதற்கு பிறகுதான் கரையைக் கடக்கும், அதனால் தரைப் பகுதியில் பெரிய அளவில் பாதிப்பு இருக்காது. மயிலாடு துறை - திருவள்ளூர் மாவட்டங்களுக்கு  இடையில் கரையைக் கடக்கும். நீலகிரி, திருப்பூர், ஈரோடு கரூர், திருச்சி, திண்டுக்கல் நாமக்கல், சேலம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, பெரம்பலூர், அரியலூர், கள்ளக்குறிச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை, மதுரை கொடைக்கானல் வால்பாறை பகுதிகளில் வலுவான மழை பெய்யும்.

இந்த புயல் கரையைக் கடப்பதற்கு முன் தூத்துக்குடி, விருதுநகர் மாவட்டங்களின் வடக்குப் பகுதியில் வலுவான மழையை கொடுக்கும்  வாய்ப்புள்ளது. வலுவிழந்து தரைப் பகுதிக்கு வந்த பிறகு தெற்கு கர்நாடகா, தமிழகத்தின் வட மாவட்டங்கள், தெற்கு ஆந்திரா பகுதி, வழியாக அரபிக் கடல் பகுதிக்கு மெல்ல கடந்து செல்லும், அதனால் உள் மாவட்டங்களில் தரைக் காற்று அதிகம் இருக்காது. கடலூர் மற்றும் அதை ஒட்டிய மாவட்டங்களில் மட்டுமே தரைக்காற்று அதிகம் இருக்கும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: