சென்னை, எழும்பூரில் இன்று வனத்துறை சார்பில் நடைபெற்ற வன உயிரின வாரவிழாவில் தமிழ்நாடு புலிகள் மாநாடு நிகழ்ச்சிகளை துவக்கி வைத்தார் வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன்

சென்னை: சென்னை, எழும்பூரில் இன்று வனத்துறை சார்பில் நடைபெற்ற வன உயிரின வாரவிழாவின் முதல் நாள் தமிழ்நாடு புலிகள் காப்பகம் குறித்த கலந்தாய்வு மாநாடாக நடத்தப்படுகிறது. தமிழ்நாடு புலிகள் மாநாடு நிகழ்ச்சிகளை மாண்புமிகு வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன், மத்திய சென்னை பாராளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் ஆகியோர் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார்கள்.

 

வன உயிரினங்கள் மற்றும் அவைகளின் வாழ்விடங்களை பாதுகாப்பது குறித்து நாடெங்கிலும் உள்ள பொதுமக்களிடம் மிகப்பெரிய அளவில் விழிப்புணர்வு ஏற்படுத்தவும், வன உயிரினங்களை பாதுகாப்பதில் அவர்களின் பங்குகள் பற்றி அறிந்துக் கொள்ளவும், தேசத் தந்தை மகாத்மா காந்தியின் பிறந்த தினமான அக்டோபர் இரண்டாம் நாள் தொடங்கி அக்டோபர் எட்டாம் தேதி வரையிலான ஒரு வார காலம் வன உயிரின வாரமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் வன உயிரின வார விழா ஒவ்வொரு ஆண்டும் பொது மக்கள் அனைவராலும் மிகுந்த ஈடுபாட்டுடன் மிகப்பெரிய அளவில் கொண்டாடப்பட்டு வருகிறது. வன உயிரினங்கள் மற்றும் அவற்றின் வாழ்விடங்களை பாதுகாப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக தமிழ்நாடு வனத்துறை, அனைத்து மாவட்டங்களிலும், மாவட்ட அளவில் ஓவியப்போட்டி, கட்டுரை போட்டி, வினாடி வினா மற்றும் பேச்சுப் போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

இவ்விழிப்புணர்வின் மூலம் இயற்கைக்கும் வன உயிரினத்திற்கும் அருகில் அவர்கள் இருப்பதை உணரச் செய்து வன உயிரினங்களுக்கும் அவற்றின் வாழ்விடத்திற்கும் குந்தகம் ஏற்படாத வகையில் நாட்டின் சுற்றுச்சூழலை மாற்றியமைக்கும் புதிய சகாப்தத்தில் அவர்கள் இருப்பதையும் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின்படி அவர்களின் அடிப்படை கடமைகளை விடாமுயற்சியுடன் செய்வது குறித்தும் இவ்விழா மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.

இந்த ஆண்டிற்கு வழங்கப்பட்ட கருப்பொருள் ‘‘வன உயிரினங்கள் பாதுகாப்பதில் நமது பங்களிப்பு – வன உயிரினங்களை பாதுக்காத்தலின் அவசியம்’’ என்ற தலைப்பில் சென்னை மாவட்ட அளவில் மாணாக்கர்கள் ஓவியப்போட்டியில் கலந்துக்கொண்டு ஓவியங்கள் வரைந்துள்ளார்கள்.  

இந்தியாவில் உள்ள மொத்த  புலிகள் எண்ணிக்கையில் 10 சதவீதம் தமிழகத்தில்தான் உள்ளன. தமிழகத்தில் உள்ள 5 புலிகள் சரணாலயம் 6195 சதுர கீலோ மீட்டர் பரப்பளவிற்கு பராமிரிக்கப்பட்டு வருகிறது. அந்த அளவிற்கு வன விலங்குகள் பராமரிப்பில் வனத்துறை மிகுந்த கவனம் செலுத்தி வருகிறு.

          

தமிழகத்தில் வனப்பரப்பை  33 சதவீதம் உயர்த்திட பசுமை தமிழ்நாடு இயக்கம் திட்டத்தை அண்மையில் தமிழ்நாடு  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ளார்கள். புலிகள்/யானைகள் காப்பகப்பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றிடவும், வனவிலங்குகளுக்கு தேவையான காலங்களில்  ஆங்காங்கு தண்ணீர் தொட்டிகள் அமைத்திடவும், காட்டுத்தீயினை கட்டுப்படுத்தவும் உரிய நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

வனத்துறை மேற்கொள்ளும் வனப்பரப்பை அதிகப்படுத்துதல் மற்றும் வன விலங்குகளை பாதுகாக்கும் பணியில் பொதுமக்களும் பங்கேற்க வேண்டும் என்பதை வலியுறுத்தி பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக வன உயிரின வார விழாவின் முதல்நாள்  தமிழ்நாடு புலிகள்(Tiger) காப்பக கலந்தாய்வு மாநாடாக நடத்தப்படுகிறது.

            

வனப்பகுதிகளில் அதிக அளவு மரக்கன்றுகளை நட்டு பராமரிக்கவும், வனப்பாதுகாப்பு, மனித-வனஉயிரின மோதல் தடுப்பு நடவடிக்கை, வனவிலங்குகளால் விவசாயிகளுக்கு ஏற்படும் இழப்புகளை தடுத்திட வனப்பணியாளர்கள் குழு அமைத்து நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது என்று தமிழ்நாடு புலிகள் காப்பகம் குறித்த கலந்தாய்வு மாநாடு நிகழ்ச்சிகளை துவக்கி வைத்த வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன்  தெரிவித்தார். சென்னை மாவட்ட அளவில் நடைபெற்ற போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்ற பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியருக்கு வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் சான்றிதழ்கள் மற்றும் பரிசுகளை வழங்கினார்கள்.   

இதனைத் தொடர்ந்து நடைபெற்ற தமிழ்நாடு புலிகள் காப்பகம் குறித்த கலந்தாய்வு நிகழ்ச்சியில் புலிகள் பாதுகாப்பு கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் டாக்டர் ராஜேஷ் கோபால், மைசூர் இயற்கை பாதுகாப்பு பவுண்டேசன் டாக்டர் ஏ.ஜே.டி. ஜான்சிங், இந்திய வன உயிரின நிறுவனத்தின் டாக்டர் கே.ரமேஷ், முதுமலை புலிகள் காப்பக இயக்குநர் டி.வெங்கடேஷ், கேரள வனத்துறை அலுவலர்  ஸ்ரீசஞ்சாயன் குமார்,  ஓய்வுபெற்ற வன அலுவலர் திரு.ராஜீவ் ஸ்ரீவஸ்தவா, ஆணைமலை புலிகள் காப்பக உதவி சர்ஜன் டாக்டர் ஈ.விஜயராகவன் ஆகியோர் பல்வேறு தலைப்புகளில்  புலிகள் காப்பகங்களில் மேற்கொள்ளப்பட்டுவரும் பல்வேறு  சீரமைப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து தங்களின் ஆய்வுக் குறிப்புகளை விவரித்தார்கள்.

இந்த விழாவில் மத்திய சென்னை பாராளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன், எழும்பூர் சட்டமன்ற உறுப்பினர் ஐ.பரந்தாமன் ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார்கள். சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சுப்ரியா சாஹு இ.ஆ.ப., முன்னிலை உரையாற்றினார். முதன்மை தலைமை வனப் பாதுகாவலர் (துறைத் தலைவர்)  சையத் முஜம்மில் அப்பாஸ், இ.வ.ப., சிறப்புரையாற்றினார்.

வன உயிரின தலைமை வனப் பாதுகாவலர் (பொ) சீனிவாஸ் ரா ரெட்டி இ.வ.ப., முன்னதாக அனைவரையும் வரவேற்று பேசினார். விழாவில் முதன்மைத் தலைமை வனப் பாதுகாவலர்கள், கூடுதல் முதன்மை தலைமை வனபாதுகாவலர்கள், மாவட்ட வனப் பாதுகாவலர்கள், சென்னை மண்டல வனப் பாதுகாவலர் திருமதி கீதாஞ்சலி,  சென்னை மாவட்ட வனப் பாதுகாவலர் திருமதி பிரியதர்ஷினி, மற்றும் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: