என்ஐஏ சோதனை எதிரொலியாக மண்ணெண்ணெய் குண்டு வீசுவோர் மீது தேசிய பாதுகாப்பு சட்டம் பாயும்: டிஜிபி சைலேந்திர பாபு எச்சரிக்கை

சென்னை: தமிழகத்தில் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் வன்முறையில் ஈடுபட்டால் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்று டிஜிபி சைலேந்திரபாபு எச்சரிக்கை விடுத்துள்ளார். தமிழகம், கேரளா, தெலங்கானா, கர்நாடகா என நாடு முழுவதும் 12 மாநிலங்களில் கடந்த 22ம் தேதி தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் 60க்கும் மேற்பட்ட இடங்களில் ஒரே நேரத்தில் அதிரடி சோதனை நடத்தினர். குறிப்பாக, பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் தேசிய மற்றும் மாநில அலுவலகங்கள், நிர்வாகிகள் வீடுகளில் சோதனை நடத்தப்பட்டது. தமிழகத்தில் சென்னை புரசைவாக்கத்தில் உள்ள பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா மாநில தலைமை அலுவலகம், நிர்வாகிகள் வீடுகள் மற்றும் மதுரை, திண்டுக்கல், கோவை, கடலூர் என பல இடங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை நடத்தினர். சோதனை முடிவில் தமிழகத்தில் மட்டும் 11 பேரை கைது செய்தனர். அவர்களில் 8 பேரை சென்னை புழல் சிறையில் அடைத்தனர். மீதமுள்ள 3 பேரை விமானம் மூலம் டெல்லிக்கு அழைத்து சென்றனர்.

இந்த சோதனையை கண்டித்து சென்னை, மதுரை, கோவை என பல இடங்களில் போராட்டங்கள் நடந்தன. சில இடங்களில் வாகனங்கள் மீது கல்வீசப்பட்டது. இதையடுத்து தமிழகம் முழுவதும் போலீசார் உஷார்படுத்தப்பட்டு பிரச்னைக்குரிய இடங்களை தேர்வு செய்து துப்பாக்கி ஏந்திய பாதுகாப்பு போடப்பட்டது. கோவை, பொள்ளாச்சி, ஈரோடு, மதுரை, ராமநாதபுரம், திண்டுக்கல், கன்னியாகுமரி, தாம்பரம் உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் பாஜ மற்றும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பு நிர்வாகிகள் வீடுகள், கடைகள், வாகனங்கள் மீது பெட்ரோல் மற்றும் மண்ணெண்ணெய் குண்டுகள் வீசப்பட்டன. இதனால் அப்பகுதியில் அசாதாரண சூழ்நிலை நிலவியது. உடனே சம்பவ இடத்திற்கு தமிழக டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவுப்படி அந்தந்த மாவட்ட எஸ்பிகள் நேரில் சென்று விசாரணை நடத்தி குற்றவாளிகளை கைது செய்து வருகின்றனர். இந்நிலையில் தமிழகத்தில் நடந்த தொடர் வன்முறை சம்பவங்களை தொடர்ந்து, டிஜிபி சைலேந்திரபாபு நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: நாடு முழுவதும் பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்புக்கு சொந்தமான அலுவலகங்கள் மற்றும் நிர்வாகிகள் வீடுகளில் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அதிகாரிகள் கடந்த 22ம் தேதி சோதனை நடத்தினர். தமிழகத்தில் சோதனையின் போது 11 பேர் கைது செய்யப்பட்டனர்.

இந்த கைது நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து குறிப்பிட்ட அமைப்பை சேர்ந்தவர்கள் சில இடங்களில் போராட்டத்தில் ஈடுபட்டு 1,410 பேர் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர். வாகனங்கள் மீது கல்வீச்சு போன்ற வன்முறை சம்பவங்களில் ஈடுபட்ட 19 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இதில், தஞ்சாவூரில் பஸ் மீது கல்வீசி சேதம் விளைவித்த அரித்திரி, சலீம், சிராஜுதின் ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இரு சக்கர வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டன. இதை தொடர்ந்து, மண்ணெண்ணெய் நிரப்பிய பாட்டில்களை சில அமைப்பை சேர்ந்தவர்களின் வீடுகள், வாகனங்கள் மற்றும் வர்த்தக நிலையங்களை குறிவைத்து வீசிய சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. இச்சம்பவங்களை தொடர்ந்து குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டு புலன் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இச்செயல்களில் ஈடுபட்ட குற்றவாளிகளை அடையாளம் கண்டு கைது செய்ய தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர தேடுதல் வேட்டை நடந்து வருகிறது.

இதுவரை 250 சந்தேக நபர்களிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. 100 பேரிடம் தொடர்ந்து விசாரணை நடக்கிறது. மண்ணெண்ணெய் பாட்டில் வீசிய சில உண்மை குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் தீவிர விசாரணை நடக்கிறது. அவர்களது இரு சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. கோவை மாநகரில் அதிவிரைவு படை (ஆர்ஏஎப்) 2 பிரிவுகள், மாநில கமாண்டோ படை 2 பிரிவுகள், சிறப்பு அதிரடிப்படை 2 பிரிவுகள் என கூடுதலாக 3,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். சம்பவ இடத்தில் சட்டம் -ஒழுங்கு காவல்துறை கூடுதல் டிஜிபி தாமரைக்கண்ணன் முகாமிட்டுள்ளார். பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் இதுபோன்ற குற்றச்செயல்களில் ஈடுபடும் குற்றவாளிகள், தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவார்கள் என்று இதன் மூலம் எச்சரிக்கப்படுகிறது. இவ்வாறு டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார்.

* வன்முறை செயல்களில் ஈடுபட்ட குற்றவாளிகளை கைது செய்ய தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர தேடுதல் வேட்டை நடக்கிறது.

* இதுவரை 250 சந்தேக நபர்களிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. 100 பேரிடம் தொடர்ந்து விசாரணை நடக்கிறது.

* மண்ணெண்ணெய் பாட்டில் வீசிய சில உண்மை குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் தீவிர விசாரணை நடக்கிறது.

Related Stories: