ராஜபாளையம் சஞ்சீவி மலையில் 3 ஆயிரம் ஆண்டு பழமையான பாறை ஓவியங்கள் கண்டுபிடிப்பு

ராஜபாளையம்:  ராஜபாளையம் சஞ்சீவி மலையில் 3 ஆயிரம் ஆண்டு பழமையான பாறை ஓவியங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. விருதுநகர் மாவட்டம், ராஜபாளையத்தில் பிரசித்தி பெற்ற சஞ்சீவி மலை அமைந்துள்ளது. இந்த மலையில், பாறை ஓவியங்கள் இருப்பதாக இயற்கை ஆர்வலர்கள் வெங்கடேஷ், பிரகாஷ்குமார் ஆகியோர், ராஜபாளையம் ராஜூக்கள் கல்லூரி வரலாற்றுத்துறை உதவிப்பேராசிரியரும், தொல்லியல்துறை ஆர்வலருமான முனைவர் கந்தசாமிக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து அவரது தலைமையில் பாறை ஓவியங்களை ஆய்வு மேற்கொண்டனர்.  

இதுகுறித்து பேராசிரியர் கந்தசாமி கூறியதாவது:

ராஜபாளையம் சஞ்சீவி மலையில் பல மூலிகைகள் காணப்படுகின்றன. மலை உச்சியில் சஞ்சீவிநாதர் மற்றும் முருகன் ஆலயம் அமைந்துள்ளது. இந்த மலையில் தேன் தட்டுப்பாறையின் அடிவாரத்தில், பாறை ஓவியங்கள் காணப்படுகின்றன. இவைகள் வெண்சாந்து கொண்டு வரையப்பட்டுள்ளன. பாறை ஓவியத்தில் ஆயுதங்களோடு மனிதன் நிற்பது போலவும், காட்டெருமை மீது ஒரு மனிதன் அமர்ந்திருப்பது போலவும், குழுவாக நடனம் ஆடுவது போலவும் வரையப்பட்டுள்ளது. மேடையின் மீது அமர்ந்த ஒருவருக்கு, நீண்ட உயரமான குடை போலவும் வரையப்பட்டுள்ளது.

விலங்குகள் மற்றும் மனிதர்கள் கோட்டுருவங்களாக வரையப்பட்டுள்ளன.  பாறை ஓவியங்களில் விலங்குகள் அதிகமாக காணப்படுகின்றன. விலங்குகள் அதிகமாக காணப்படுவதால், தொடக்க காலகட்டமாகும். மனிதனின் சண்டைக் காட்சிகள் அடுத்தடுத்த காலகட்டங்களில் வரையப்பட்டிருக்க வேண்டும். பல காலகட்டங்களாக இப்பாறை ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன. இவற்றில், முக்கோண அமைப்புகள், குறியீடுகள் மற்றும் பல சின்னங்கள் காணப்படுகின்றன. இவற்றில் குறியீட்டு உருவங்களை முழுமையாக கணிக்க இயலவில்லை. நீண்ட நெடிய பாறை முழுவதும் வரையப்பட்டுள்ள ஓவியங்கள், பல இடங்களில் அழிந்து காணப்படுகின்றன.

வெண்சாந்து பாறை ஓவிய அமைப்பை உற்று நோக்கும்போது, காலத்தால் சற்று முற்பட்டதாக தெரிகிறது. தமிழகத்தில் பல இடங்களில் வெண்சாந்து ஓவியங்கள் பெருங்கற்காலத்தில் வரையப்பட்டுள்ளன. எனவே, இப்பாறை ஓவியங்கள் 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டதாக கருதப்படுகிறது. ஆரம்ப காலங்களில் செஞ்சாந்து ஓவியங்கள் வரைந்து, அதற்கு மேல் வெண்சாந்து ஓவியங்கள் தீட்டப்பட்டிருக்கின்றன. இப்பாறை ஓவியங்கள் எழுத்துக்கள் தோன்றுவதற்கு முன் ஓவிய எழுத்துக்களாக வரையறுக்கப்படுகிறது.

சஞ்சீவி மலை தெற்கு மலையடிப்பட்டி பகுதியில், ஏராளமான முதுமக்கள் தாழிகள் கண்டறியப்பட்டுள்ளன. இந்த பாறை ஓவியங்கள் பெருங்கற்கால பண்பாட்டோடு தொடர்புடையதாக கருதப்படுகிறது. முருகன் கோயில் அருகே உள்ள பாறையில், அலங்காரத்துடன் விஷ்ணுவின் முழு கோட்டுருவம் மிக நேர்த்தியாக வரையப்பட்டுள்ளது. அதன் அருகிலேயே பாறை ஒன்றில், சூரிய வட்டம் ஒன்று பெண் உருவில் செதுக்கப்பட்டுள்ளது. சஞ்சீவி மலையில் உள்ள இப்பாறை ஓவியத்தை, தொல்லியல் துறையினர் ஆய்வு செய்து பாதுகாக்க முன்வர வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Related Stories: