திருவண்ணாமலை பள்ளியில் இருந்த 1ம் வகுப்பு மாணவியை கடத்தி நகை பறித்த வாலிபர்

திருவண்ணாமலை: பள்ளியில் இருந்த 1-ம் வகுப்பு மாணவியை சாக்லெட், பிஸ்கெட் கொடுத்து கடத்திய வாலிபர் அவர் அணிந்திருந்த 2கிராம் கம்மலை பறித்துக்கொண்டு தப்பினார். சிறுமியை பயணிகள் மீட்டு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

திருவண்ணாமலை மாரியம்மன் கோயில் முதல் தெருவை சேர்ந்தவர் சாகுல்அமீது(32). வெளிநாட்டில் வேலை செய்கிறார். இவரது மனைவி ரிஸ்வானா(30). மகள் ஷாலிஹா(6). இவர் முகல்புறா தெருவில் உள்ள நகராட்சி நடுநிலைப் பள்ளியில் 1ம்வகுப்பு படித்து வருகிறார். நேற்று காலை மகள் ஷாலிஹாவை அவரது தாயார் ரிஸ்வானா பள்ளியில் விட்டு சென்றார். மதியம் உணவு கொடுப்பதற்காக பள்ளிக்கு வந்தபோது மகளை காணவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த அவர், அங்கிருந்தவர்களிடம் கேட்டபோது சிறுமி ஷாலிஹாவை ஒரு வாலிபர் பைக்கில் உட்கார வைத்து கடத்தி சென்றது தெரியவந்தது.

இதற்கிடையில் நேற்று மதியம் மன்னார்குடியில் இருந்து திருவண்ணாமலை வழியாக திருப்பதி சென்று கொண்டிருந்த ரயிலில் சிறுமி ஷாலிஹா அழுதபடி பயணம் செய்தார். இதனால் சந்தேகமடைந்த பயணிகள் அவரிடம் கேட்டபோது நடந்த சம்பவத்தை கூறியுள்ளார். இதையடுத்து சிறுமி ஷாலிஹாவை மீட்டு காட்பாடி ரயில் நிலையத்தில் போலீசாரிடம் ஒப்படைத்தனர். சிறுமியிடம் நடத்திய விசாரணையில், மர்ம நபர் ஒருவர் சாக்லெட் மற்றும் பிஸ்கெட் பாக்கெட்டுகளை கொடுத்து,ரயில் நிலையம் வரை பைக்கில் அழைத்து வந்துள்ளார். பின்னர், சிறுமியின் காதில் அணிந்திருந்த 2கிராம் கம்மலை கழற்றி கொண்டு, அவரை ரயிலில் விட்டுவிட்டு சென்றது தெரியவந்தது.

இதுகுறித்து தகவலறிந்த திருவண்ணாமலை போலீசார், சிறுமியை மீட்டு அவரது தாயாரிடம் ஒப்படைத்தனர். மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து, சிறுமியை கடத்திய மர்ம நபரை தேடிவருகின்றனர்.

Related Stories: