துரைப்பாக்கம்: சென்னை அடுத்த முட்டுக்காட்டில் உள்ள ஒரு பண்ணை வீட்டில் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக தங்கியிருந்து பணியாற்றி வருபவர் பரத்துடு(52). இவரது மனைவி சுஜாதா(48). தினமும் குடிபோதையில் வந்து மனைவியுடன் தகராறில் ஈடுபட்டுவந்துள்ளார் பரத்துடு. இதுதவிர மனைவி நடத்தையில் சந்தேகப்பட்டு அவரை அடித்து உதைத்துவந்ததாக தெரிகிறது.
இந்த நிலையில், நேற்றிரவு தம்பதி இடையே கடும் பிரச்னை ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரம் அடைந்த பரத்துடு அங்கு கிடந்த ஒரு சேலையை எடுத்து சுஜாதாவின் கழுத்தை இறுக்கி கொடூரமாக கொலை செய்துள்ளார். பின்னர் தான் பூச்சிக்கொல்லி மருந்து குடித்து தற்கொலைக்கு முயன்றார். இதை பார்த்ததும் அக்கம்பக்கத்தினர் வந்துபார்த்து மயங்கிய நிலையில் பரத்துடு கிடந்ததும் அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து தகவல் கிடைத்ததும் கானத்தூர் போலீசார் சென்று பரத்துடுவை மீட்டு சிகிச்சைக்காக சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சுஜாதா சடலத்தை பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.