செய்துங்கநல்லூர்: ஆதிச்சநல்லூர் அகழாய்வு பணியில் தங்கத்தால் ஆன நெற்றிப்பட்டயம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதால் ஆய்வாளர்கள் உற்சாகமடைந்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டம், வைகுண்டம் அருகே ஆதிச்சநல்லூர் பரம்பு பகுதியில் மூன்று இடங்களில் அகழாய்வு பணி நடந்து வருகிறது. இதுவரை 80க்கும் மேற்பட்ட முதுமக்கள் தாழிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் நேற்று சி சைட் பகுதியில் கிடைத்த முதுமக்கள் தாழியில் தங்கத்தால் ஆன 3.5 சென்டி மீட்டர் நீளம் கொண்ட நெற்றிப்பட்டயம் எடுக்கப்பட்டுள்ளது. அதில் வெண்கலத்தால் ஆன ஜாடியும் கிடைத்துள்ளது. அதன் மேல் அலங்காரமாக கொக்கு, வாத்து பறவைகள் நீர் அருந்துவது போல் அமைக்கப்பட்டுள்ளது.
மேலும் அதே குழியில் 2 வெண்கலத்தால் ஆன வடிகட்டியும் கிடைத்துள்ளது. இந்த குழியில் இதுவரை 9 அம்புகள், 1 வாள், 1 ஈட்டி, 1 சூலம், தொங்கவிட்டான் உள்பட 20 இரும்பு பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனால் ஆய்வாளர்கள் உற்சாகமடைந்துள்ளனர். இதுகுறித்து மத்திய தொல்லியல் துறை திருச்சி மண்டல இயக்குநர் அருண்ராஜ் கூறும்போது, ‘இங்கு கண்டெடுக்கப்பட்டுள்ள தங்கம் ஆதிச்சநல்லூரில் அமைய உள்ள அருங்காட்சியகத்தை அலங்கரிக்கும்’ என்றார். ஆதிச்சநல்லூரில் 1902ல் அலெக்சாண்டர் ரியா என்பவர் அகழாய்வு செய்தபோது தங்கத்தாலான நெற்றிப்பட்டயம், காதணி கண்டுபிடிக்கப்பட்டது. இந்நிலையில் 120 ஆண்டிற்குப் பின் தற்போது தங்கத்தாலான ெநற்றிபட்டயம் கண்டெடுக்கப்பட்டது ஆய்வாளர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.