கொடநாடு கொலை விவகாரம் ஜெயலலிதா டிரைவர் கனகராஜ் மனைவிக்கு கொலைமிரட்டல் விடுத்து மானபங்கம்: 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு; கொழுந்தன் கைது

சேலம்: கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு விவகாரத்தில் ஆத்தூரில் மர்மமான முறையில் உயிரிழந்த ஜெயலலிதாவின் கார் டிரைவர் கனகராஜின் மனைவிக்கு கொலை மிரட்டல் விடுத்து, மானபங்கம் செய்த கொழுந்தன் மீது 5 பிரிவின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து, கைது செய்தனர். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் கொடநாடு பங்களாவில் காவலாளி கொலை, கொள்ளை சம்பவம் நடந்தது. இவ்வழக்கில் தொடர்புடைய ஜெயலலிதாவின் கார் டிரைவரான கனகராஜ், ஆத்தூரில் மர்மமான முறையில் வாகன விபத்தில் உயிரிழந்தார். தன் கணவர் சாவில் சந்தேகம் இருப்பதாக, மனைவி கலைவாணி புகார் கொடுத்தார்.

இதன்பேரில் போலீசார் அந்த வழக்கை மீண்டும் விசாரித்தனர். பின்னர், கொடநாடு வழக்கோடு, கனகராஜ் வழக்கையும் சேர்த்து, கோவை மேற்கு மண்டல ஐஜி சுதாகர் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இவ்வழக்கில் ஆதாரங்களை அழித்து, சாட்சியை கலைத்ததாக கனகராஜின் அண்ணன் தனபாலை, கொடநாடு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். அவர் சமீபத்தில் ஜாமீனில் வெளியே வந்துள்ளார். இதனிடையே கனகராஜின் மனைவி கலைவாணி (28), ஆத்தூரில் இருந்து சென்னை கே.கே.நகர் பாலைத்தெருவில் உள்ள ஒரு வீட்டிற்கு இடம்பெயர்ந்து, அங்கு குழந்தைகளுடன் வசித்து வருகிறார். இம்மாத தொடக்கத்தில் கலைவாணியை, கனகராஜின் மற்றொரு அண்ணன் பழனிவேல் (44) தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அதில், கனகராஜ் பெயரில் பணிக்கனூரில் உள்ள இடத்தை விற்று தருவதாகவும், அதற்காக ஊருக்கு வரும்படியும் கூறியிருக்கிறார்.

இதன்பேரில், கடந்த 3ம் தேதி தனது அண்ணனுடன் கலைவாணி, தாரமங்கலத்திற்கு வந்துள்ளார். அங்கு வந்த பழனிவேல், கலைவாணியை பணிக்கனூரில் உள்ள கோவிந்தராஜ் என்பவரது வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு வைத்து நிலத்தை வாங்க வந்தவர்களை அறிமுகப்படுத்தி பேசியுள்ளார். அப்போது நிலத்தை விற்க முடியாத அளவிற்கு செய்துவிடுவேன் என திடீரென பழனிவேல் பேசி, வாங்க வந்தவர்களை அனுப்பி வைத்துள்ளார். ஏன் இப்படி செய்தீர்கள் என கலைவாணி கேட்டதற்கு, உனது புகாரால் தான், எனது அண்ணன் தனபால் சிறையில் அடைக்கப்பட்டார்.

இதுவரை ரூ.4 லட்சம் செலவு ஆகியிருக்கு. அதனால், செலவான பணத்தை கொடுத்துவிட்டு, வழக்கையும் வாபஸ் வாங்க வேண்டும். இல்லையென்றால் கொன்று விடுவேன் என மிரட்டல் விடுத்து, சேலையை பிடித்து இழுத்து மானபங்கம் செய்துள்ளார். இதனால், அங்கிருந்து வேகமாக தப்பிய கலைவாணி, ஜலகண்டாபுரம் போலீசில் புகார் கொடுத்தார். அதன் அடிப்படையில் விசாரணை நடத்திய போலீசார் மானபங்கம் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துபழனிவேலை நேற்றுகைது செய்தனர். அவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் சேலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: