பாலியல் புகாரின் கைதானபாஜ நிர்வாகியின் காவல் நீட்டிப்பு

திருவில்லிபுத்தூர்:  அருப்புக்கோட்டை நர்சிங் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த புகாரில் கைதான கல்லூரி தாளாளருக்கு நீதிமன்றக் காவலை வரும் ஜூலை 8ம் தேதி வரை நீட்டித்து, திருவில்லிபுத்தூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டையில் உள்ள தனியார் நர்சிங் கல்லூரி தாளாளர்  தாஸ்வின் ஜான் கிரேஸ். இவர், விருதுநகர் கிழக்கு மாவட்ட பாஜ சிறுபான்மை பிரிவு முன்னாள் தலைவர். இவர், தனது கல்லூரியில் படிக்கும் 2ம் ஆண்டு மாணவி ஒருவருக்கு செக்ஸ் டார்ச்சர் கொடுத்த புகாரின்பேரில், அருப்புக்கோட்டை அனைத்து மகளிர் போலீசார் கடந்த 11ம் தேதி கைது செய்தனர். இதையடுத்து திருவில்லிபுத்தூர் வன்கொடுமை தடுப்பு நீதிமன்றத்தில் தாஸ்வின் ஜான் கிரேஸை ஆஜர் செய்தனர்.

அப்போது ஜூன் 24ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பாக நேற்று விசாரணை நடத்திய திருவில்லிபுத்தூர் வன்கொடுமை தடுப்பு நீதிமன்ற நீதிபதி கோபிநாத், தாஸ்வின் ஜான் கிரேஸூக்கு வரும் ஜூலை 8ம் தேதி வரை 15 நாட்களுக்கு நீதிமன்ற காவலை நீட்டித்து உத்தரவிட்டார். இந்த வழக்கு விசாரணை  வீடியோ கான்பரன்ஸ் முறையில் நடந்தது.

Related Stories: