தபால் அலுவலக வளாகத்தில்‌ கத்தியுடன் பெண் வேடத்தில் சுற்றிய மர்ம நபர்: வாலாஜாவில் பரபரப்பு

வாலாஜா: வாலாஜா தபால் அலுவலக வளாகத்தில் பெண் வேடமணிந்து கத்தியுடன் சுற்றிய மர்ம நபரால் பரபரப்பு ஏற்பட்டது. ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா-சோளிங்கர் சாலையில் தபால் அலுவலகம் இயங்கி வருகிறது. இந்த அலுவலக வளாகத்தில் நேற்று உடல் முழுவதும் கறுப்பு துணியால் மூடியபடி பெண் போல் ஒருவர் சுற்றிசுற்றி வந்தார். இதனால் சந்தேகமடைந்த தபால் அலுவலர் சவுந்தரி, அந்த நபரிடம் விசாரித்தார். ஆனால் அவர் முன்னுக்குபின் முரணாக பதிலளித்துவிட்டு அங்கிருந்து தப்பியோடினார்.

அவரை ஊழியர்கள் மற்றும்  பொதுமக்கள் விரைந்து சென்று பிடித்து வாலாஜா போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் அவரை சோதனையிட்டபோது பெண் வேடத்தில் சுற்றிய ஆண் என்பதும், அவரிடம் துணியால் சுற்றப்பட்ட கத்தி இருந்ததும் தெரிய வந்தது. அதனை போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தினர். போலீசார் நடத்திய விசாரணையில், காஞ்சிபுரத்தை சேர்ந்த சேகர்(50) என தெரியவந்தது. இவர் ஏற்கனவே வாலாஜா‌வில் தேங்காய் கடை வைத்து வியாபாரம் செய்து வந்துள்ளார்.

வியாபாரத்தில் நஷ்டம் ஏற்பட்டதால் ஊரைவிட்டு சென்றுள்ளார். தற்போது எவ்வித வருமானம் இன்றியும், குடும்ப பிரச்னை காரணமாகவும் மனநலம் பாதித்து சுற்றி  திரிந்து வருவதும் தெரியவந்தது. இதையடுத்து அவரது குடும்பத்தினருக்கு போலீசார் தகவல் தெரிவித்து வரவழைத்தனர். அவர்களிடம் சேகரை ஒப்படைத்த போலீசார், சேகரை  மனநல மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளிக்கும்படி அறிவுறுத்தினர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories: