×

சென்னை, கோவை உள்பட 5 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகம் 1.33 லட்சம் சாதாரண படுக்கையில் 8% பேர் உள்நோயாளிகளாக அனுமதி: 50 ஆயிரம் மையங்களில் இன்று தடுப்பூசி முகாம்

சென்னை: சென்னை, கோவை உள்ளிட்ட ஐந்து மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகம் கண்டறியப்பட்டுள்ளது. மேலும் 1.33 லட்சம் சாதாரண படுக்கையில் 8 சதவீதம் பேர் மட்டுமே உள்நோயாளிகளாக உள்ளனர் என்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் சுப்பிரமணியன் கூறினார். இந்தியாவில் கொரோனா பாதிப்பின் தற்போதைய நிலை மருத்துவ கட்டமைப்பு, தடுப்பூசி நிலவரம் போன்றவை குறித்து அனைத்து மாநிலங்களுடான ஆலோசனை கூட்டம் ஒன்றிய அமைச்சர் மான்சுக் மாண்டவியா தலைமையில் நேற்று நடந்தது.

காணொலி வாயிலாக நடந்த கூட்டத்தில், சென்னை தலைமை செயலகத்தில் இருந்து மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் சுப்பிரமணியன் பங்கேற்றார். நிகழ்ச்சியில் மருத்துவத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், பொது சுகாதாரத்துறை இயக்குநர் செல்வவிநாயகம், இணை இயக்குநர் சம்பத் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர். அப்போது ஒன்றிய அமைச்சரிடம் அமைச்சர் சுப்பிரமணியன் கூறியதாவது:

தமிழகத்தில் நேற்று முன்தினம் வரை 2.14 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுகின்றனர். தினசரி பாதிப்பு, 28 ஆயிரத்துக்கு கீழ் குறைந்துள்ளது. சிகிச்சை பெறுபவர்களில் 94.8 சதவீதம் வீட்டு தனிமையிலும், 5.2 சதவீதம் மருத்துவமனைகளிலும் உள்ளனர். கோவை, செங்கல்பட்டு, திருப்பூர், கன்னியாகுமரி, சென்னை ஆகிய மாவட்டங்களில் தொற்று பாதிப்பு அதிகம் கண்டறியப்படுகின்றன. மாநிலத்தில், 1.33 லட்சம் சாதாரண படுக்கையில், 8 சதவீதம் பேர் மட்டுமே உள்நோயாளிகளாக உள்ளனர். மேலும், 42 ஆயிரத்து 660 ஆக்சிஜன் படுக்கைகளில் 10 சதவீதம் பேரும், 10 ஆயிரத்து 147 தீவிர சிகிச்சை பிரிவு படுக்கையில் 11 சதவீதம் பேரும் சிகிச்சை பெறுகின்றனர்.

மாநிலத்தில், 5.78 கோடி பேர் தடுப்பூசி போட தகுதியானவர்களாக உள்ளனர். அவர்களில், 89.83 சதவீதம் முதல் தவணையும், 67.30 சதவீதம் இரண்டாம் தவணை தடுப்பூசியும் போடப்பட்டுள்ளது. கடந்த ஆட்சிக் காலத்தில் 4 லட்சத்து 34 ஆயிரத்து 838 (6%) தவணை தடுப்பூசிகள் வீணாக்கப்பட்டது. 21ம் ஆண்டு மே 7ம் தேதி முதல் நாங்கள் பொறுப்பேற்ற பிறகு முதல்வரின் வழிகாட்டுதலின்படி 11 லட்சத்து 14 ஆயிரத்து 550 தடுப்பூசிகள் அதிகமாக செலுத்தப்பட்டுள்ளது. மேலும் தமிழகத்தில் 19 மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு 3,46,94,487 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. மேலும் இன்று 20வது தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது.

மேலும், 15 முதல் 18 வயது வரை உடைய 33.46 லட்சம் பேரில், 25 லட்சத்து 87 ஆயிரத்து 878 பேருக்கு முதல் தவணை தடுப்பூசி போடப்பட்டுள்ளது. அதேபோல், 3 லட்சத்து 31 ஆயிரத்து 187 பேருக்கு பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. வாரந்தோறும் மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்படுகிறது. அதன்படி இன்று 50 ஆயிரம் மையங்களில் தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது. இவ்வாறு அமைச்சர் சுப்பிரமணியன் கூறினார்.

Tags : Corona ,Chennai ,Coimbatore , Chennai, Coimbatore, corona infection, inpatient, vaccination camp today
× RELATED கோவை மாநகராட்சி நீச்சல் குளத்தில் குவியும் சிறுவர்கள்