சின்னமனூர்: மாவட்டத்தில், நகர் மற்றும் கிராமம் என எல்லா இடங்களிலும் பெரும்பாலான மின்கம்பங்கள் சேதமடைந்து விபத்திற்குள்ளாகும் நிலையில் உள்ளது என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். தமிழகத்தின் பல மாவட்டங்களில், கடந்த 10 ஆண்டுகளாக அதிமுக ஆட்சியில் மின்வாரிய துறையின் மூலம் மின்கம்பங்கள் முறையாக பராமரிக்கப்பட்டு சீரமைக்கப்படாமல் பழுதான நிலையில் உள்ளன. சின்னமனூர் அருகே எரணம்பட்டி கிராம ஊராட்சி உள்ளது. இங்கு 8 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசிக்கின்றனர். இங்கு கோணாம்பட்டி, முத்தையன் செட்டிபட்டி, கந்தசாமிபுரம் உள்ளிட்ட உட்கிடை கிராமங்களும் உள்ளன. சங்கராபுரத்திலிருந்து தேவாரம் சாலை கோணாம்பட்டி பிரிவிலிருந்து எரணம்பட்டிக்கு 2 கிலோ மீட்டர் தூரம் உள்ளது. கோணாம்பட்டி முன்பாக இரண்டு மின் கம்பங்கள் பல மாதங்களாக சேதமடைந்த நிலையில் இருந்து வருகிறது. இது எப்போது வேண்டுமானாலும் கீழே சாய்ந்து விழும் நிலையில் உள்ளது.