ஒடுகத்தூர் பகுதியில் வாகன சோதனை: விதிமீறிய 50 பேருக்கு அபராதம்

ஒடுகத்தூர்: ஒடுகத்தூர் பகுதியில் போலீசார் நேற்று நடத்திய வாகன சோதனையில் விதிமீறிய 50 பேரிடம் அபராதம் விதித்தனர். ஒடுகத்தூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள ஏராளமான மலை கிராமங்களில் சாராய விற்பனை அதிகளவு நடைபெறுவதாகவும், மேலும் பைக் மூலம் சாராயம் கடத்துவதாகவும் புகார்கள் எழுந்தது. அதனை தடுக்கும் வகையில் போலீசார் பல்வேறு பகுதிகளில் சோதனை நடத்தி நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் வேப்பங்குப்பம் எஸ்.ஐக்கள் சீனிவாசன், ஜெயக்குமார், பத்மநாபன் மற்றும் போலீசார் நேற்று ஒடுகத்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி எதிரே திடீர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, முகக்கவசம் மற்றும் லைசன்ஸ் இன்றி சென்ற 50 பேருக்கு அபராதம் விதித்தனர். இதுகுறித்து போலீசார் கூறுகையில், ஒடுகத்தூர் சுற்றியுள்ள மலைப்பகுதிகளில் சாராயம் விற்பதாக எழுந்த புகார்களின்பேரில் வாகன சோதனை நடத்தப்பட்டது.

அப்போது, மாஸ்க் மற்றும் லைசென்ஸ் இன்றி வரும் நபர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. இந்த சோதனை தொடரும்’ என்றனர்.

Related Stories: