திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸிடம், செவ்வாப்பேட்டை ஊராட்சி தலைவர் டெய்சிராணி அன்பு அளித்துள்ள கோரிக்கை மனு: செவ்வாப்பேட்டை ஊராட்சியில் 12 அரசு அதிகாரம் பெற்ற மனைப்பிரிவுகள் அமைக்கப்பட்டது. இதன் சார்பில் பூங்காவிற்காக 1 லட்சத்து 50 ஆயிரம் சதுர அடி நிலம் தானமாக வழங்கப்பட்டது. எங்களது ஊராட்சியின் வழியாக 205 தேசிய நெடுஞ்சாலை புறவழிச்சாலை அமைக்கப்பட்டு வருகிறது. இதற்காக நிலம் கையகப்படுத்தும் பணி நடந்தது. இதில் ஊராட்சிக்கு தானமாக வழங்கப்பட்ட பூங்காவையும் தேசிய நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் கையகப்படுத்தியுள்ளனர்.
எனவே பூங்காவிற்கான இழப்பீடு தொகையினை ஊராட்சி நிர்வாகத்திற்கு வழங்குமாறு தேசிய நெடுஞ்சாலை துறை அதிகாரிகளை அணுகினோம். அதற்கு அவர்கள், ஊராட்சிக்கு தானமாக ஒப்படைக்கப்பட்ட சாலைகள் மற்றும் பூங்காக்களுக்கான நிதியினை மனைப்பிரிவு அமைச்சர்களே பணம் பெற்றுவிட்டதாக கூறினர். எனவே தாங்கள் உரிய விசாரணை நடத்தி ஊராட்சி நிர்வாகத்திற்கு சேர வேண்டிய இழப்பீடு தொகையை வழங்க சட்டப்படி நடவடிக்கை எடுத்து ஊராட்சியின் வளர்ச்சிக்கு உதவிடுமாறு கேட்டு கொள்கிறோம். இவ்வாறு மனுவில் கூறியுள்ளனர். அப்போது ஒன்றிய திமுக பொருளாளர் அன்பு ஆல்பர்ட் மற்றும் துணைத் தலைவர், ஊராட்சி செயலாளர், வார்டு உறுப்பினர்கள் உடனிருந்தனர்.