மதுரை: மதுரை அரசு மருத்துவமனை எதிரே 60 வயது மதிக்கத்தக்க ஆதரவற்ற முதியவர் நேற்று காலை இறந்து கிடந்தார். மதுரை தல்லாகுளம் போலீசார் விசாரித்த போது அவரது சட்டைப்பையில் வங்கிக் கணக்கு புத்தகம் ஒன்று கசங்கிய நிலையில் இருந்தது. அதனை பார்த்தபோது, அவர் மதுரை நாகமலை புதுக்கோட்டையைச் சேர்ந்த ராதா (60), காமராஜர் பல்கலைக்கழகத்தில் லேப் டெக்னீசியனாக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர் என்பதும், அவரது வங்கிக் கணக்கில் ரூ.20 லட்சத்திற்கும் மேலாக பணம் இருந்ததும் தெரிந்தது. இறந்து கிடந்தவர் ஆதரவற்றவராக மதுரை அரசு மருத்துவமனை பகுதியில், கடந்த 10 நாட்களாக சுற்றித் திரிந்துள்ளார். இதைத்தொடர்ந்து, முதியவரின் குடும்பத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பிரேத பரிசோதனைக்கு பிறகு அவர்களிடம் உடல் ஒப்படைக்கப்பட்டது.