மாதவரம் சார்பதிவாளர் அலுவலகத்தில் ரூ10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய துணை பதிவாளர் கைது: உதவியாளரும் சிக்கினார்

திருவொற்றியூர்: மாதவரத்தில் பதிவு செய்யப்பட்ட அசல் பத்திரத்தை வழங்க ரூ10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய துணை பதிவாளர் மற்றும் அவரது உதவியாளர் கைது செய்யப்பட்டனர். சென்னை மாதவரத்தை சேர்ந்த ஒருவர், கடந்த 2 வாரங்களுக்கு முன் தான் கிரயம் பெற்ற நிலத்தை பத்திரப்பதிவு செய்துள்ளார். பின்னர் பத்திரப்பதிவு செய்யப்பட்ட அசல் பத்திரத்தை வாங்க, மாதவரம் சார்பதிவாளர் அலுவலகத்தை அணுகினார். அவரிடம் அசல் பத்திரம் தர துணை பதிவாளர் ரூ10 ஆயிரம் லஞ்சம் கேட்டதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து கடந்த 8-ம் தேதி சென்னை லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் சம்பந்தப்பட்ட நபர் புகார் அளித்தார். இப்புகாரின்பேரில் நேற்று ரசாயனம் தடவிய 10 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை சம்பந்தப்பட்ட நபரிடம் லஞ்ச ஒழிப்பு போலீசார் கொடுத்து, அதை மாதவரம் சார்பதிவாளர் அலுவலகத்தில் கொடுக்கும்படி தெரிவித்தனர். அப்பணத்தை துணை பதிவாளரிடம் சம்பந்தப்பட்ட நபர் கொடுத்தார். துணை பதிவாளர் அப்பணத்தை வாங்கி உதவியாளரிடம் கொடுத்து வைத்தார்.

அப்போது அங்கு லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி பாஸ்கர் தலைமையில் போலீசார் அதிரடியாக நுழைந்தனர். ரூ10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய துணை பதிவாளர் கிருஷ்ணமூர்த்தி, இளநிலை உதவியாளர் சுதாகர் ஆகிய இருவரையும் கைது செய்து விசாரிக்கின்றனர்.

Related Stories: