ஊட்டி: ஊட்டி ரோஜா பூங்காவில் உள்ள அனைத்து பாத்திகளிலும் அழுகிய மலர்கள் அகற்றும் பணி நடந்து வருகிறது. நீலகிரி மாவட்டத்திற்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். குறிப்பாக, கோடை காலமான ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நடக்கும் முதல் சீசனின்போது அதிகளவு சுற்றுலா பயணிகள் வருவது வாடிக்கை. அதேபோல் செப்டம்பர் மாதம் துவங்கி அக்டோபர் மாதம் வரை 2 மாதங்கள் இரண்டாவது சீசனை கொண்டாட ஊட்டிக்கு அதிகளவு சுற்றுலா பயணிகள் வருகின்றனர். கொரோனா தொற்றால் கடந்த 2 ஆண்டுகளாக சுற்றுலா பயணிகள் வர தடை விதிக்கப்பட்டது. இதனால், முதல் சீசனின்போது சுற்றுலா பயணிகள் வர முடியாத நிலை ஏற்பட்டது.
இந்நிலையில், முதல் சீசனுக்காக ஊட்டி ரோஜா பூங்காவில் உள்ள அனைத்து மலர் செடிகளும் கவாத்து செய்யப்பட்டு சிறந்த முறையில் பராமரிக்கப்பட்டு செடிகளில் மலர்கள் பூத்திருந்தன. தற்போது, ஊட்டியில் நாள்தோறும் மழை பெய்து வரும் நிலையில், மலர்கள் அனைத்தும் அழுகி உதிரத்துவங்கியுள்ளன. இதனால், அழுகிய மலர்களை தற்போது பூங்கா ஊழியர்கள் அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர். பெரும்பாலான செடிகளில் தற்போது மலர்கள் அழுகி உதிர்ந்த நிலையில் அவைகள் அகற்றப்பட்டு வருகிறது. அதேசமயம் பெரும்பாலான செடிகளில் மலர்கள் காணப்படுகிறது. ஓரிரு நாட்கள் மழை பெய்தால், இந்த செடிகளில் உள்ள மலர்களும் அழுகி உதிர வாய்ப்புள்ளது.