சென்னை: நகைசுவை நடிகர் விவேக் மாரடைப்பு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நடிகர் விவேக்கின் உடல்நிலையை உன்னிப்பாக கவனித்து வருவதாக மருத்துவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். அண்மையில் திரைப்பட படப்பிடிப்புக்காக வட இந்திய மாநிலங்களுக்கு நடிகர் விவேக் சென்று திரும்பியிருந்தார். நேற்று காலை தடுப்பூசி தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காகவும், கொரோனா தடுப்பூசியில் பின்விளைவு இல்லை என்பதை உணர்த்துவதற்காகவும் சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டார். பின்னர் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் முன்னிலையில் தடுப்பூசி குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
தொடர்ந்து விவேக் காலை முதற்கொண்டு திரைப்பட படப்பிடிப்பில் இருந்து வந்தார். அப்போது தீடீரென அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. உடனடியாக சென்னையில் உள்ள மருத்துவமனை கொண்டுசெல்லப்பட்டு அவருக்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. நடிகர் விவேக்கின் உடல்நிலையை உன்னிப்பாக கவனித்து வருவதாக மருத்துவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். அவரச சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு மூச்சு திணறல் உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. முக்கிய நகைசுவை நடிகர்களில் ஒருவராக நடிகர் விவேக் இடம்பிடித்து வருகிறார்.
தமிழ் சினிமாவை பொறுத்தமட்டில் முன்னணி நகைசுவை நடிகராக உள்ள விவேக்கின் திடீர் உடல்நலக்குறைவு சினிமா வட்டாரத்தில் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. திரைத்துறை மட்டுமின்றி நடுதல், கொரோனா தடுப்பு விழிப்புணர்வு பணிகளிலும் ஈடுபட்டு வந்த நிலையில் விவேக்கிற்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. சின்னக்கலைவாணர் என்று அழைக்கப்படும் விவேக், தனது திரைப்படங்களில் நேர்மறை எண்ணங்களை அதிகம் விதைப்பவர் என்பது குறிப்பிடத்தக்கது.