கட்டாய காத்திருப்போர் பட்டியலில் வைப்பது போதாது: சிறப்பு டிஜிபியை சஸ்பெண்ட் செய்க: டிஜிபி திரிபாதியிடம் 10 பெண் ஐபிஎஸ் வலியுறுத்தல்.!!!

சென்னை: பாலியல் புகாருக்கு ஆளான சிறப்பு டிஜிபியை சஸ்பெண்ட் செய்யக்கோரி 10 பெண் ஐபிஎஸ் அதிகாரிகள் டிஜிபியிடம் வலியுறுத்தியுள்ளனர். தமிழக போலீஸ் துறையில் சட்டம் ஒழுங்கு சிறப்பு டிஜிபி-யாக பணியாற்றி வருபவர் ராஜேஷ்தாஸ் அண்மையில் தமிழக சட்டம் ஒழுங்கு ஸ்பெஷல் டிஜிபி-யாக தமிழக அரசு நியமித்தது.

இதற்கிடையே, இவர் மீது தமிழக காவல் துறையில் பணியாற்றும் பெண் ஐபிஎஸ் அதிகாரி ஒருவர் இவர் மீது கடந்த பிப்ரவரி 24ம் தேதி பாலியல் புகார் ஒன்றை தெரிவித்துள்ளார். அதில் அண்மையில் முதலமைச்சர் டெல்டா மாவட்ட சுற்றுப் பயணம் சென்றபோது ஸ்பெஷல் டிஜிபி ராஜேஷ்தாஸ் உடன் சென்றதாகவும், அப்போது அவரை வரவேற்க வந்த ஐபிஎஸ் பெண் அதிகாரி ஒருவரிடன் அத்துமீறி நடந்து கொண்டதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

அதேசமயம் பெண் ஐபிஎஸ் அதிகாரி ஒருவர் கூறிய பாலியல் புகார் அடிப்படையில் ராஜேஷ்தாஸ் மீது விசாரிக்க குழு அமைத்திருப்பதாக கடந்த பிப்ரவரி 25ம் தேதி தமிழக அரசு அதிகாரபூர்வமாக அரசாணை வெளியிட்டது. மேலும், பாலியல் புகாரை அடுத்து, இவர் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டு உள்ளார். தொடர்ந்து, ராஜேஷ் தாஸ் மீது பெண் ஐபிஎஸ் அதிகாரி கொடுத்த புகாரின் அடிப்படையில் சிபிசிஐடிக்கு மாற்றி டிஜிபி திரிபாதி கடந்த 28-ம் தேதி உத்தரவிட்டார்.

இந்நிலையில், பாலியல் புகாருக்கு ஆளான சிறப்பு டி.ஜி.பியை சஸ்பெண்ட் செய்ய 10 பெண் ஐபிஎஸ் தமிழக டி.ஜி.பி திரிபாதியிடம் வலியுறுத்தியுள்ளனர். மேலும், சிறப்பு டிஜிபி, பெண் எஸ்.பியை தடுத்த செங்கல்பட்டு எஸ்.பி. மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். சிறப்பு டிஜிபி மீதான பாலியல் புகாரை சிபிஐக்கு மாற்ற வேண்டும். கட்டாய காத்திருப்போர் பட்டியலில் வைத்துள்ளது மட்டும் போதாது; மேல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர். பெண் ஐ.பி.எஸ் அதிகாரிகள் ஒன்றுகூடி டி.ஜி.பி. ஒருவர் மீதே புகார் கூறியதால் காவல்துறையினர் மத்தியில் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

இதற்கிடையே, சிறப்பு டிஜிபி, செங்கல்பட்டு எஸ்.பி. ஆகியோரை கைது செய்யக்கோரி ஜனநாயக மாதர் சங்கத்தினர் தமிழகம் முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Related Stories: