புறநகர் ரயில்களில் பயணிகளின் உயிருக்கு பாதுகாப்பு வசதி தருவது ரயில்வே அதிகாரிகளின் கடமை: உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை: புறநகர் ரயில்களில் பயணிகளின் உயிருக்கு போதுமான பாதுகாப்பு வசதிகளை ஏற்படுத்த வேண்டியது ரயில்வே அதிகாரிகளின் கடமை எனத் தெரிவித்த சென்னை உயர் நீதிமன்றம், புறநகர் ரயிலில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்த பெண்ணின் குடும்பத்துக்கு 8 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க உத்தரவிட்டது.சென்னையில் வசிக்கும் தனது தாயைச் சந்திக்க திண்டுக்கல்லில் இருந்து வந்த இந்துராணி என்ற 38 வயது பெண், புறநகர் ரயிலில் பயணித்த போது, கோடம்பாக்கம் - நுங்கம்பாக்கம் ரயில் நிலையங்களுக்கு இடையில், ரயிலில் இருந்து தவறி விழுந்து சம்பவ இடத்திலேயே பலியானார்.

அவரது மரணத்துக்கு இழப்பீடு கோரி, ரயில்வே தீர்ப்பாயத்தில் வழக்கு தொடரப்பட்டது.

ஆனால், பயணச்சீட்டு தொலைந்து விட்டதால், அவர் பயணி அல்ல எனக் கூறி, கோரிக்கையை தீர்ப்பாயம் நிராகரித்து விட்டது.இதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம்,  ரயில்களில் பயணிக்கும் பயணிகளின் உயிருக்கு பாதுகாப்பு வழங்க வேண்டியது ரயில்வே அதிகாரிகளின் கடமை. கதவுகள் திறந்து இருப்பதால் புறநகர் ரயில்களில் இதுபோன்ற அசம்பாவித சம்பவங்கள் நடக்கிறது.

அவற்றில் இருந்து அதிகாரிகள் எந்த பாடத்தையும் கற்றுக் கொள்ளவில்லை.அஜாக்கிரதையாகவும், கவனக்குறைவாகவும் இருந்ததாக கூறி இழப்பீடு வழங்க மறுக்க முடியாது. பயணிகளுக்கு போதிய பாதுகாப்பு வசதிகளை ஏற்படுத்தாத ரயில்வே நிர்வாகத்துக்கும் இந்த அசம்பாவித சம்பவத்தில் பங்கு உள்ளது.எனவே, பலியான பெண்ணின் குடும்பத்துக்கு 8 லட்சம் ரூபாய் இழப்பீட்டை ஆறு சதவீத வட்டியுடன் தர வேண்டும் என்று உத்தரவிட்டார்.

Related Stories: