ராமாயணத்தை நேர்மையாக சொல்லும் இயக்குனர்

நிதேஷ் திவாரி இயக்கத்தில் ரன்பீர் கபூர், சாய் பல்லவி, யஷ் நடித்த ‘ராமாயணா: பகுதி 1’ என்ற பிரமாண்டமான படம், வரும் நவம்பர் 8ம் தேதி திரைக்கு வருகிறது. நமித் மல்ஹோத்ராவின் பிரைம் ஃபோகஸ் ஸ்டுடியோஸ், 8 முறை அகாடமி விருதுகள் வென்ற விஎஃப்எக்ஸ் நிறுவனமான டிஎன்இஜி, யஷ்ஷின் மான்ஸ்டர் மைண்ட் கிரியேஷன்ஸ் தயாரித்துள்ளன. படம் குறித்து நிதேஷ் திவாரி கூறுகையில், ‘உலகின் மிகச்சிறந்த கதைகளில் ஒன்றாக ராமாயணம் இருப்பதற்கு காரணம், அதன் பிரமாண்டம் மட்டுமல்ல; அது எடுத்துரைக்கும் காலத்தை வென்ற மனிதர்களின் மதிப்புகள்தான். ஒரு திரைப்பட இயக்குனராக இக்கதையை உலகளவில் கொண்டு செல்ல வேண்டும் என்ற எண்ணம் எனக்கு இல்லை. ஏனெனில், அது ஏற்கனவே உலகளாவிய கதையாகவே இருக்கிறது.

எனது பொறுப்பு, அதை முழுமையாக, நேர்மையாக, உண்மைத்தன்மை நிறைந்ததாக, அதிக மரியாதையுடன் திரையில் கொண்டு வருவதுதான். திரைக்கதை, நடிகர்களின் நடிப்பு, கலை இயக்கம், இசை, விஷூவல் எஃபெக்ட்ஸ் உள்பட எல்லா விஷயங்களும் மிகச்சிறப்பாக இருக்கும். ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக வாழ்ந்து வரும் இந்த மகத்தான பாரம்பரியத்தை அதற்குரிய கண்ணியத்துடனும், மரியாதையுடனும் போற்ற வேண்டும் என்பதே அந்த எண்ணம். உலகின் தலைசிறந்த கலைஞர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் கதைசொல்லிகளுடன் இணைந்து இக்கனவு நனவானது. இப்படத்தை நான் இயக்கியதை மிகப்பெரிய பாக்கியமாக நினைக்கிறேன். பிரமாண்ட காட்சிகளை மட்டுமல்ல; ராமாயணத்தின் உணர்வுகளையும், மனிதநேயத்தையும், ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக அதை உயிருடன் வைத்திருக்கும் அதன் ஆன்மாவையும், ரசிகர்கள் திரையில் கண்டு மகிழ்வார்கள் என்று நம்புகிறேன்’ என்றார்.

Related Stories: