இயக்குனரிடம் அடம்பிடித்த அதர்வா முரளி

தயாரிப்பாளர் டான் பிக்சர்ஸ் ஆகாஷ் பாஸ்கரன் இயக்குனராக அறிமுகமாகும் ‘இதயம் முரளி’ என்ற படம், வரும் 10ம் தேதி திரைக்கு வருகிறது. அதர்வா முரளி, கயாடு லோஹர், பிரீத்தி முகுந்தன் நடித்துள்ளனர். தமன் இசை அமைத்து, முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார். படம் குறித்து அதர்வா முரளி கூறுகையில், `கதிர் இயக்கத்தில் எனது தந்தை முரளி நடித்த படம், ‘இதயம்’. எனக்கு தெரிந்து ‘இதயம் முரளி’ என்ற தலைப்பு, கடந்த 2016ல் இருந்தே பல இயக்குனர்களால் சொல்லப்பட்டு வந்தது. கடைசியாக அந்த தலைப்பு தரமான ஒரு படத்துக்காக என்னை வந்து சேர்ந்தது. ‘இதயம்’ படம் ஒரு கல்ட் கிளாசிக் காதல் காவியம். அது ஒருதலைக்காதல் குறித்த கதையாக இருந்தாலும், காலப்போக்கில் அது பலரது உணர்வாகவே மாறிவிட்டது. அந்த தலைப்பு, ஒருதலைக்காதல் செய்யும் ஒட்டுமொத்த ரசிகர்களுக்கும் தனித்துவமான எமோஷன் என்று சொல்லலாம்.

அதனால், இந்த படம் எனக்கு மிகவும் ஸ்பெஷல். இந்த தலைப்பை வைக்கலாம் என்று சொன்னபோது, ‘இது மட்டும் வேண்டாம். வேறு ஏதாவது மாற்றி வையுங்கள்’ என்று சொன்னேன். இது சரியாக இருக்குமா என்ற தயக்கம்தான் அதற்கு காரணம். ஆனால், ‘இந்த கதைக்கு இது பொருத்தமான தலைப்பு’ என்று அவர் விவரித்தபோது, அதை புரிந்துகொண்ட நான், ‘சூப்பர். இந்த தலைப்பையே வைத்துக்கொள்ளலாம்’ என்று சம்மதித்தேன். எனது தாய் ஷோபா எமோஷனலாக பேச மாட்டார். ஆனால், ‘இந்த படம் ஒரு தரமான படமாக அமைய வேண்டும் என்பதை உறுதி செய்துகொள்’ என்று அறிவுறுத்தினார். அவரது வார்த்தை எனக்குள் எப்போதும் ஓடிக்கொண்டே இருக்கும். தினமும் படப்பிடிப்புக்கு செல்வதற்கு முன்பு ஆகாஷ் லைனுக்கு சென்று, ‘இது நமக்கு மிகவும் முக்கியமான ஒரு படம். எல்லா காட்சிகளும் கச்சிதமாக படமாக்கப்பட வேண்டும்’ என்று சொல்வேன். வழக்கமாக ஒரு படத்துக்கு நான் வெளிப்படுத்தும் உழைப்பை விட, அக்கறையை விட, இந்த படத்துக்கு கூடுதலான உழைப்பை வழங்கியுள்ளேன்’ என்றார்.

Related Stories: