மன அமைதிக்காக சோஷியல் மீடியாவில் இருந்து விலகுகிறேன்: கயாடு லோஹர் திடீர் முடிவு

சென்னை: கன்னடத்தில் ‘முகில்பேட்டே’ என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் கயாடு லோஹர். தொடர்ந்து மலையாளம், தெலுங்கு, மராத்தி ஆகிய மொழிகளில் நடித்து வந்த அவர் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் வெளியான ‘டிராகன்’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். தற்போது ஜி.வி.பிரகாஷ் குமாருடன் ‘இம்மார்ட்டல்’, அதர்வாவுடன் ‘இதயம் முரளி’, சிம்புவுடன் ‘அரசன்’ ஆகிய படங்களில் பிசியாக நடித்து வருகிறார். மேலும், மாரி செல்வராஜ் இயக்கத்தில் இளையராஜா இசையில் உருவாகும் ‘மஞ்சணத்தி’, நானி நடிப்பில் பான் இந்தியா படமான உருவாகும் ‘தி பாரடைஸ்’, துல்கர் சல்மான் நடிக்கும் ‘ஐயம் கேம்’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில், திடீரென சோஷியல் மீடியாக்களில் இருந்து விலகுவதாக கயாடு லோஹர் அறிவித்துள்ளது அவரது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக அவர் நேற்று வெளியிட்டுள்ள பதிவில், ‘சோஷியல் மீடியாக்களில் இருந்து சிறிது காலம் விலகி இருக்க போகிறேன். சில நேரங்களில் உடலுக்கு ஓய்வு தேவைப்படுவது போல், மனதிற்கும் ஓய்வு அவசியம். வாழ்க்கையின் வேகத்தை சற்று குறைத்து, திரைக்கு அப்பால் உள்ள நிஜ வாழ்க்கையுடனும், என்னுடனும் அதிக நேரம் செலவிட விரும்புகிறேன். எனக்கு தொடர்ந்து ஆதரவளித்து, அன்பையும் ஊக்கத்தையும் வழங்கிய அனைவருக்கும் மனமார்ந்த நன்றி.

உங்கள் அன்பும் வாழ்த்துகளும் மிகவும் மதிப்புமிக்கவை. நான் சிறிது காலம் சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்க மாட்டேன். ஆனால், முக்கிய தகவல்கள் ஏதேனும் இருந்தால், எனது குழுவினர் இந்த கணக்கின் மூலம் பகிர்வார்கள். அனைவருக்கும் அமைதியும், மகிழ்ச்சியும், அன்பும் கிடைக்கட்டும். விரைவில் மீண்டும் சந்திப்போம்’ என்று தெரிவித்துள்ளார்.

Related Stories: