ஐதராபாத்: ராம் சரண், ஜான்வி கபூர், சிவராஜ்குமார் நடிப்பில் புஜ்ஜி பாபு சனா இயக்கியுள்ள படம் `பெத்தி’. இப்படம் ஜூன் 4ம் தேதி வெளியான நிலையில், படத்தில் ஜான்வி கபூரை வெறும் கவர்ச்சிக்காக மட்டுமே பயன்படுத்தியிருப்பதாக இயக்குனர் மீது கடும் விமர்சனம் எழுந்தது. குறிப்பாக ஜான்வி கபூரின் காட்சிகள் கவர்ச்சியின் எல்லையை மீறிவிட்டதாக சமூகவலைதளங்களிலும் பெத்தி படத்தின் மீதும், இயக்குனர் மீதும் கடும் விமர்சனங்கள் வைக்கப்பட்டன.
இந்தசூழலில் கடும் விமர்சனங்களுக்கு இடையே படத்தில் உள்ள தேவையற்ற கவர்ச்சிக் காட்சிகளை நீக்குவதாகவும், பெண்கள் மீது மதிப்பு இருப்பதாகவும், அசௌகரியத்திற்கு மன்னிப்பு கேட்பதாகவும் எக்ஸ் தளத்தில் இயக்குனர் புஜ்ஜிபாபு பதிவிட்டுள்ளார். அவர் கூறும்போது, ‘‘திரையிலும் சரி, நிஜத்திலும் சரி, பெண்கள் மீது எனக்கு எப்போதுமே மிகுந்த மரியாதை உண்டு. எந்தவொரு பெண் கதாபாத்திரத்தையும் ஒரு பொருட்டில்லை என கருதுவதோ அல்லது அவமதிப்பதோ எங்கள் நோக்கமாக ஒருபோதும் இருந்ததில்லை.
அதுபோல் உணர்ந்தவர்களிடம் இதற்காக மனப்பூர்வமாக மன்னிப்புக் கோருகிறோம். கருத்துக்களை மதிப்பாய்வு செய்த பிறகு, சம்பந்தப்பட்ட பகுதிகளில் மாற்றங்களைச் செய்ய நாங்கள் முடிவு செய்துள்ளோம். ஒவ்வொரு பெண்ணும் மதிக்கப்படவும், போற்றப்படவும், கண்ணியத்துடன் சித்தரிக்கப்படவும் தகுதியானவர். வலிமையான கதாபாத்திரங்களைக் கொண்டாடும் மற்றும் அந்த விழுமியங்களை நிலைநிறுத்தும் கதைகளைச் சொல்வதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். தங்கள் கருத்துக்களை நேர்மையாகவும் உண்மையாகவும் பகிர்ந்துகொண்ட அனைவருக்கும் நன்றி’’ என்றார்.
