சமந்தாவை நான் ஏமாற்றினேனா? முன்னாள் கணவர் நாக சைதன்யா புகார்

புதுடெல்லி: தனது முன்னாள் மனைவி சமந்தா குறித்து இணையதளங்களில் பரப்பப்படும் அவதூறு செய்திகளுக்கு எதிராக நடிகர் நாக சைதன்யா டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். கடந்த 2009ம் ஆண்டு ‘யே மாயா சேசவே’ என்ற படத்தில் இணைந்து நடித்தபோது நாக சைதன்யா, சமந்தா இருவரும் நட்பாக பழகி வந்தனர். பின்னாளில் அதுவே காதலாக மாற 2017ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர்.

திருமணமான 4 ஆண்டுகளில், அவர்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, கடந்த 2021ம் ஆண்டு இருவரும் விவாகரத்து பெற்று பிரிவதாக அறிவித்தனர். அதன் பிறகு 2024ம் ஆண்டு ஐதராபாத்தில் நடிகை சோபிதா துலிபாலாவை நாக சைதன்யா திருமணம் செய்து கொண்டார். சமந்தா கடந்த ஆண்டு கோவையில் உள்ள ஈஷா யோகா மையத்தில் திரைப்பட இயக்குனர் ராஜ் நிடிமோருவை திருமணம் செய்து கொண்டார். இருவரும் அவரவர் தனிப்பட்ட வாழ்விலும், சினிமாவிலும் கவனம் செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், சமந்தாவுடனான விவாகரத்துக்கு நாக சைதன்யாவின் துரோகமே காரணம் என்றும், சமந்தாவின் திரை வாழ்க்கையை நாக சைதன்யா அழித்துவிட்டதாகவும் சோஷியல் மீடியாக்களில் பொய்யான செய்திகள் பரவி வந்தது. இதனால் தனது தனிப்பட்ட உரிமையை பாதுகாக்கவும், அவதூறு பரப்பும் செயலை தடுக்கவும் டெல்லி உயர் நீதிமன்றத்தில் நாக சைதன்யா வழக்கு தொடர்ந்தார்.

அதன்படி சமந்தாவை தான் ஏமாற்றியதாகவும், தன்னை பற்றிய ட்ரோல்கள் பகிரப்பட்டு வருவதாகவும் நாக சைதன்யா தரப்பில் நீதிமன்றத்தில் முறையிடப்பட்டது. இந்த வழக்கை கடந்த 29ம் தேதி விசாரித்த நீதிபதி ஜோதி சிங், நாக சைதன்யாவின் பெயர் மற்றும் போட்டோக்களை பயன்படுத்த இடைக்கால தடை விதித்ததுடன், அவதூறு செய்திகளை வெளியிட்ட இணையதளங்களுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளார்.

Related Stories: