கொச்சி: மோகன்லால் நடிப்பில் உருவாகவிருந்த புதிய படத்தின் அறிமுக இயக்குநர் ஆஸ்டின் டான் தாமஸ், படப்பிடிப்பு தொடங்குவதற்கு ஒரு மாதத்திற்கு முன்பு திடீரென தலைமறைவானார். இதை தயாரிப்பாளர் ஆண்டனி பெரும்பாவூர் சமீபத்தில் நடைபெற்ற ரசிகர் சந்திப்பில் உறுதிப்படுத்தியுள்ளார். இதனால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டு, படக்குழுவினர் தவித்து வந்தனர். ஆஷிக் உஸ்மான் தயாரிப்பில், ஆஸ்டின் டான் தாமஸ் இயக்கத்தில் மோகன்லால் நடிக்கவிருந்த புதிய படத்தின் படப்பிடிப்பு தொடங்கவிருந்தது.
படப்பிடிப்பு தொடங்குவதற்கு ஒரு மாதத்திற்கு முன்பு திடீரென தொலைபேசி அழைப்புகளை எடுக்காமல் ஆஸ்டின் காணாமல்போனதால் பரபரப்பு ஏற்பட்டது. அதிக மன அழுத்தத்தின் காரணமாக அவர் பயந்துபோய் படத்திலிருந்து விலகியதாக தயாரிப்பாளர் தெரிவித்தார். இதையடுத்து அந்தப் படத்தைத் தற்போது தருண் மூர்த்தி இயக்குகிறார். இவர் மோகன்லால் நடித்த தொடரும் படத்தை இயக்கியவர். இந்த படத்தை ‘அதிமனோகரம்’ என்ற தலைப்பில் இயக்கி வருகிறார்.
