சென்னை: தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகை சமந்தா, இந்தி வெப்தொடரிலும் நடித்து வருகிறார். சமீபத்தில் தனது 39வது பிறந்தநாளை ரசிகர்களுடன் இணைந்து கொண்டாடி மகிழ்ந்த அவர், நடிக்க வந்து 16 வருடங்களை நிறைவு செய்துள்ளார். இந்நிலையில், ட்ரலாலா மூவிங் பிக்சர்ஸ் சார்பில் ‘மா இன்டி பங்காரம்’ என்ற படத்தை தயாரித்து நடித்துள்ளார். இது வரும் 15ம் தேதி திரைக்கு வருகிறது. கடந்த ஆண்டு இயக்குனர் ராஜ் நிடிமோருவை கரம்பிடித்த சமந்தா, ஐதராபாத் வீட்டை காலி செய்துவிட்டு மும்பையில் குடியேறியுள்ளார்.
இந்நிலையில் அவர் அளித்துள்ள பேட்டியில், ‘எனக்கு இன்னொரு பெயர் இருக்கிறது. அந்த பெயர், எனது பெற்றோர் எனக்கு வைத்தது இல்லை. நானே எனக்காக தேர்ந்தெடுத்து வைத்துக்கொண்டேன். யசோதா என்ற பெயருடன் எனக்கு நெருங்கிய தொடர்பு இருப்பதால், இந்த பெயரை வைத்துதான் எனது நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் தனிப்பட்ட முறையில் என்னை அழைப்பார்கள். அதனால்தான் கடந்த 2022ல் ‘யசோதா’ என்ற படத்தில் நடித்தேன்’ என்று சொல்லியிருக்கிறார்.
