மலையாளத்தில் 16 வருட இடைவெளிக்கு பிறகு மோகன்லால், மம்மூட்டி இணைந்து நடிக்கும் படம், ‘பேட்ரியாட்’. வரும் மே 1ம் தேதி திரைக்கு வருகிறது. இந்நிலையில் மோகன்லால் அளித்துள்ள பேட்டியில், ‘நான் நடித்த பழைய படங்களின் சில காட்சிகளை பார்க்கும்போது, என் மனம் சோகத்தில் மூழ்கிவிடும். அந்த பிரேம்களில் என்னுடன் நின்றிருந்த பல நடிகர், நடிகைகள் இன்று உயிருடன் இல்லை. அந்த சோகம் என்னை ஆட்கொள்கிறது.
ஆனால், துக்கப்படுவதால் என்ன பிரயோஜனம்? நாளை நானும் மறைந்துவிடுவேன். அதுதான் யதார்த்தம். இந்த உண்மை முழுமையாக தெரிந்தும் கூட நான் வருத்தப்படுகிறேன். நமது கண்ணீர் என்பது தத்துவங்களுக்கு அப்பாற்பட்டது. உலகம் எத்தனையோ தத்துவங்களை பார்த்துவிட்டது. எனினும், மனிதன் இன்னும் அழுதுகொண்டே இருக்கிறான். நானும் ஒரு சாதாரண மனிதன்தானே.
எனது தாய், தந்தை, சகோதரர் ஆகியோர் என்னைவிட்டு பிரிந்துவிட்டனர் என்பது எனக்கு அதிக துயரத்தை அளிக்கிறது. எனினும், ஒருபோதும் என்னை தனிமையில் இருப்பதாக நினைத்து வருத்தப்பட்டது இல்லை. கண்களை மூடினால், அவர்கள் எனக்குள் இருப்பது போலவே தோன்றுகிறது. என்னால் அவர்களை தொடவோ, பார்க்கவோ முடியாது என்பது மட்டுமே நிஜம்’ என்று, உருக்கமாக பேசியுள்ளார்.
