மதுரை: திண்டுக்கல் மாவட்டம், பழநி தொகுதியில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் என்.பாண்டியை ஆதரித்து நடிகர் பிரகாஷ்ராஜ் பிரசாரம் மேற்கொண்டார். தொடர்ந்து அரசியல் நிலவரம் குறித்து அவர் அளித்த பேட்டி: சாமி சிலையை திருடும் கும்பலை பார்த்திருப்போம். ஆனால் சாமியை திருடும் கும்பல் தற்போது வந்துள்ளது. இந்த தேர்தலை மூன்று மாடல்களுக்கான தேர்தலாக பார்க்க வேண்டும். ஒன்று கல்வி மற்றும் மொழியை காக்கும் திராவிட மாடல்.
இந்தியாவிலேயே ஒரு மாநிலம் இப்படி இருக்க வேண்டும் என பெருமையை சேர்த்தது. மொழி மானத்தை காப்பாற்றியது. தற்போது இன மானத்தை காப்பாற்ற போராடுகிறது. இரண்டாவது தன்மானத்தை அடகு வைக்கும் அடிமை மாடல். மூன்றாவது ஒரே நாளில் முதல்வர் ஆக துடிக்கும் சினிமா மாடல். தன்மானத்தை தூக்கி கொண்டு போய் மோடியின் காலடியில் வைக்கும் அடிமை மாடல் நமக்கு தேவையா? தமிழ்நாடு ஒரு கிணறு போன்றது.
அதில் தவளைகளாகிய நாம் நிம்மதியாக வாழ்ந்தோம். ஆனால், பதவி ஆசை பிடித்த எடப்பாடி பழனிசாமி போன்ற ஒரு தவளை, வெளியே சென்று பாஜ என்கிற பாம்பை தமிழ்நாட்டிற்குள் அழைத்து வருகிறது. அந்த பாம்பு உள்ளே வந்தால் மற்ற தவளைகளை மட்டுமல்ல. அந்த பாம்பைத் தூக்கி வந்த தவளையையும் சேர்த்து விழுங்கிவிடும். இப்படி தன்மானத்தை மோடியின் காலடியில் அடகு வைப்பதுதான் அடிமை மாடல்.
எடப்பாடி தலைமையிலான அடிமை மாடல், தமிழ்நாட்டிற்கு துரோகம் நடந்து கொண்டிருக்கும் நேரத்தில் வாயை மூடி நிற்கிறது. இந்த மாடல் நமக்கு தேவையா என மக்கள் சிந்திக்க வேண்டும். திருப்பரங்குன்றம் பற்றி பேச தேவையில்லை. மதுரையை இன்னொரு மணிப்பூராக்க போகிறார்கள். அங்கிருந்து நேராக பழநி வருவார்கள். இதுதான் அவர்களின் வேலை. சினிமா மாடல் என்றால் சினிமாவில் டாக்டர் ஆகலாம், இன்ஜினியர் ஆகலாம். ஏன் முதலமைச்சர் கூட ஆகலாம். அரசியலில் வந்த உடனே முதலமைச்சராக முடியுமா? நிஜ அரசியலில் அப்படி ஆக முடியாது.
விஜய் என் அளவிற்கு கூட அரசியல் பேசியதில்லை. இத்தனை வருடங்களாக தமிழ்நாட்டிற்கோ, மொழிக்கோ, தன்மானத்திற்கோ பிரச்னை வந்தபோது வந்து நிற்கவில்லை. மக்கள் வைத்துள்ள அன்பு திறமைக்குத்தான். அரசியலுக்கில்லை. அதை பயன்படுத்துகிறார். வெயிலில் வரிசையில் நின்று, கட்அவுட் வைத்து, வீட்டை பற்றிக்கூட யோசிக்காமல் காட்டிய அன்பை, அரசியலுக்கு வருவதற்காக பயன்படுத்த கூடாது.
நடிகனை பிடித்தால் தொண்டையில் விரலை விட்டு விசில் அடிக்கலாம். ஆனால் நாட்டை கொடுத்து விட கூடாது. அரசியல் வேறு, சினிமா வேறு. அந்த அன்பு வேறு, இந்த அன்பு வேறு. அதற்கு களத்தில் இறங்கணும், பேசணும். திராவிட மாடல் வேண்டுமா? அடிமை மாடல் வேண்டுமா, சினிமா மாடல் வேண்டுமா என மக்கள் முடிவு செய்ய வேண்டும். விஜய் கூறுவது போல் திமுகவிற்கும், தவெகவிற்கும் இடையே நடக்கும் தேர்தல் அல்ல. இது ஒற்றுமைக்கும், பிரிவினைக்கும் இடையே நடைபெறும் தேர்தல். இவ்வாறு பேசினார்.
* ஒற்றுமையா? பிரிவினையா?
‘‘யாரை தேர்ந்தெடுக்கிறோம். இந்தியாவின் அரசியல் என்ன? எதற்காக தமிழ்நாடு போராடுகிறது, எந்த அணி நமக்காக நிற்கும். தமிழுக்காக துடிக்கும் என்பதை மக்கள் நினைத்து பார்க்க வேண்டும். தமிழ்நாடு எப்பவும் இந்தியாவிற்கு ஒரே மாதிரியாக நின்றிருக்கிறது. இந்தி திணிக்கட்டும். நீட் திணிக்கட்டும். எதை திணிக்கும்போதும் எதிர்த்து நிற்க வேண்டும்.
இன்னும் வலுவாக நிற்க வேண்டுமென்றால் எந்த அணிக்கு வாக்களிக்க வேண்டுமென மக்கள் முடிவெடுக்க வேண்டும். அரசியலை மக்களாகிய நாம் செய்ய வேண்டிய நேரம் வந்துவிட்டது. ஒற்றுமையா, பிரிவினையா என்பதை மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.தொகுதி மறுவரையறை திருத்த மசோதாவின் மூலம், தென்னிந்தியாவின் அரசியல் அதிகாரத்தை பறிக்கும் முயற்சியில் ஒன்றிய அரசு ஈடுபடுகிறது.
பெரும்பான்மையை வைத்து எதையும் தீர்மானிக்க நினைத்தால் அது ஜனநாயகத்திற்கு ஆபத்து. மக்கள் தொகை அடிப்படையில் தொகுதிகளை மாற்றினால் தென்னிந்தியா, அரசியல் அநாதையாக மாறும். பெரும்பான்மையை வைத்துத்தான் எல்லாம் தீர்மானிக்கப்படும் என்றால், காகத்தைத்தான் தேசிய பறவை ஆக்க வேண்டும். மயிலை அல்ல என்று அண்ணா அன்றே சொன்னார்’’ என்றார் பிரகாஷ் ராஜ்.
