அரை நிர்வாண ‘போஸ்’ விஷ்ணு பிரியா மீது போலீசில் புகார்

ஐதராபாத்: தெலுங்கு நடிகை விஷ்ணு பிரியா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவ்வப்போது கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களைப் பகிர்ந்து வருவது வழக்கம். இருப்பினும், சமீபகாலமாக அவர் பதிவிடும் சில புகைப்படங்கள் எல்லை மீறி இருப்பதாகவும், அவை சமூக ஒழுக்கத்திற்கு எதிரானவை என்றும் சமூக ஆர்வலர்கள் மற்றும் சில அமைப்புகள் குற்றம் சாட்டியுள்ளன.

குறிப்பாக விளம்பரங்களுக்காக அவர் பயன்படுத்தும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இளம் தலைமுறையினரிடையே தவறான தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளதாக அந்த புகாரில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்த விவகாரம் குறித்து ஐதராபாத் சைபர் கிரைம் போலீசாரிடம் முறைப்படி புகார் அளிக்கப்பட்டுள்ளது. புகார்தாரர்கள் தரப்பில், விஷ்ணு பிரியா தனது புகழைப் பயன்படுத்தி இது போன்ற அரை நிர்வாண புகைப்படங்களுடன் விளம்பரங்களைச் செய்வதன் மூலம் சமூக வலைதளங்களின் விதிகளை மீறுவதோடு மட்டுமல்லாமல், பொது நாகரிகத்திற்கும் குந்தகம் விளைவிக்கிறார் என்று வாதிடப்பட்டுள்ளது.

டிஜிட்டல் தளங்களில் இதுபோன்ற உள்ளடக்கங்கள் எளிதாக அனைவரையும் சென்றடைவதால், இது போன்ற செயல்களைத் தடுக்க கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர். விஷ்ணு பிரியா தெலுங்கில் பல வெற்றிப் படங்களில் ஒரு பாடலுக்கு ஆடி நடித்தவர் என்பதால், இந்தச் செய்தி தெலுங்குத் திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: