சென்னை: இயக்குனர் ஹரி மீது தயாரிப்பாளர்கள் சங்கத்தில் நடிகர் பிரசாந்த் புகார் அளித்துள்ளார். ஹரி இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க இருந்தார் பிரசாந்த். இந்த படத்தின் துவக்க விழா சென்னையில் கடந்த ஆண்டு நடைபெற்றது. ஆனால் திட்டமிட்டபடி படப்பிடிப்பு நடைபெறவில்லை. படப்பிடிப்புக்கு முந்தைய பணிகளுக்காக பிரசாந்த் செலவு செய்திருக்கிறார். மேலும் ஹரிக்கு சம்பளத்தில் முன்பணம் தந்துள்ளார். இவை இரண்டையும் ஹரி திருப்பி தர வேண்டும் என தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தில் பிரசாந்த் முறையிட்டார்.
இது தொடர்பாக தயாரிப்பாளர்கள் சங்கம் ஹரியிடம் விசாரித்ததாக கூறப்படுகிறது. அப்போது, படத்துக்காக வாங்கிய முன்பணம் திருப்பித் தருகிறேன். அதே சமயம், ப்ரீ புரொடக்ஷன் பணியால் ஆன செலவினம், படத்தின் வேலைகளுக்காக நடந்தது. அதில் எனக்கு என்ன பயன் இருக்கப்போகிறது? எனது சொந்த வேலைக்காக அதை பயன்படுத்தவில்லையே என ஹரி கூறியிருக்கிறாராம். இதையடுத்து இந்த புகார் தொடர்பாக சினிமா வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.
