ஆந்திர மாநில துணை முதலமைச்சரும், தெலுங்கு முன்னணி நடிகருமான பவன் கல்யாண் நடித்துள்ள உஸ்தாத் பகத்சிங் என்ற படம், வரும் 19ம் தேதி திரைக்கு வருகிறது. இப்படத்தின் பிரீ-ரிலீஸ் நிகழ்ச்சி ஐதராபாத்தில் நடந்தது. அப்போது பவன் கல்யாண் பேசுகையில், ‘ஒவ்வொரு படமும் கண்டிப்பாக வெற்றிபெற்றே ஆக வேண்டும் என்று உண்மையாகவே நான் விரும்புகிறேன். அந்த வெற்றிப் படங்களில் எனது படமும் ஒன்றாக இருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். ஆன்லைனில் மோதிக்கொள்வது, வெவ்வேறு ரசிகர்களுக்கு இடையிலான சண்டை இல்லாமல், ரசிகர்கள் தங்களின் அபிமான ஹீரோக்களின் படங்களை தியேட்டரில் பார்த்து ரசித்து மகிழ வேண்டும்.
இன்னும் பல ஹீரோக்கள் அறிமுகமாகி வெற்றிபெற வேண்டும். அதிக எண்ணிக்கையிலான படங்கள் வந்தால்தான், சினிமாவை நம்பியிருக்கும் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் நன்றாக வாழ முடியும். ஒவ்வொரு ஹீரோவும் வருடத்துக்கு ஓரிரு படங்களில் மட்டும்தான் நடிக்க முடியும். நான் அரசியலில் இருப்பதால், என்னால் ஓரிரு படங்களில் நடிப்பதே மிகப்பெரிய விஷயமாக இருக்கிறது. அனைத்து படங்களையும் பார்த்து அவற்றை கொண்டாடுங்கள்’ என்றார். இயக்குனர் ஹரிஷ் சங்கர், நடிகைகள் லீலா, ராசி கன்னா, பார்த்திபன் மற்றும் படக்குழுவினர் பங்கேற்றனர்.
