சென்னை: நடிகை ஹன்சிகாவுக்கும் மும்பை தொழிலதிபர் சோஹேல் கதூரியாவுக்கும் ஜெய்ப்பூரில் உள்ள ஒரு கோட்டையில் கடந்த 2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் பிரமாண்டமாகத் திருமணம் நடந்தது. அவர்களின் திருமண நிகழ்வுகள் லவ் ஷாதி டிராமா என்ற இந்தி ரியாலிட்டி டிவி நிகழ்ச்சியிலும் ஒளிபரப்பப்பட்டது. திருமணத்துக்கு பிறகும் ஹன்சிகா படங்களில் நடித்து வந்தார். இந்நிலையில் கடந்த ஓரிரு ஆண்டுகளாக ஹன்சிகாவுக்கும் சோஹேலுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதையடுத்து தனது இன்ஸ்டா பக்கத்திலிருந்து கணவரின் புகைப்படங்களை ஹன்சிகா நீக்கினார்.
இந்நிலையில் ரகசியமாக மும்பை பந்தாரா குடும்பநல நீதிமன்றத்தில் ஹன்சிகாவே முன்வந்து விவாகரத்து வழக்கு தொடுத்திருக்கிறார். நேற்று நீதிமன்றம் தம்பதிக்கு விவாகரத்து அளித்து தீர்ப்பளித்தது. தம்பதியினருக்கு பரஸ்பர சம்மதத்தின் அடிப்படையில் விவாகரத்தை வழங்கியதாக கூறப்படுகிறது. மேலும், இந்த வழக்கில் கணவரிடம் ஜீவனாம்சம் எதுவும் ஹன்சிகா கேட்கவில்லை என அவரது வக்கீல் தெரிவித்துள்ளார். தமிழ் நடிகர், நடிகைகள் தொடர்ந்து விவாகரத்து செய்து வருவது கடந்த சில ஆண்டுகளாக அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.
