சென்னை: திங்க் மியூசிக் தயாரிப்பில், சாய் அபயங்கர் இசையமைத்து, அதிகம் எதிர்பார்க்கப்பட்ட இண்டீ பாடல் ‘பவழ மல்லி’ இதில் சாய் அபயங்கருடன் கயாடு லோஹர் நடித்துள்ளார். சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்த பாடல் வெளியிடப்பட்டது. சாய் அபயங்கர் மற்றும் ஸ்ருதி ஹாசன் இணைந்து பாடியுள்ளனர். இந்த பாடல் தனித்துவமான இசை ரசனை மற்றும் காட்சி அமைப்புகளால் ஏற்கனவே கவனத்தை ஈர்த்து வருகிறது.
நிகழ்வில் சாய் அபயங்கர் பேசியது: சூர்யாவின் கருப்பு, தனுஷின் 55வது படம் மற்றும் அல்லு அர்ஜூன் – அட்லீ திரைப்படத்திற்கும் நான் இசையமைக்கிறேன். அட்லீ அண்ணா என்னை முதலில் சந்தித்தபோது, எனது ஒரு தனிப்பாடல் இசையை இசைத்துக் காட்டினேன். உடனடியாக அவர் தனது அடுத்த படத்திற்கு இசையமைக்க விருப்பமா என்று கேட்டார். அவர் என்மீது வைத்த நம்பிக்கைக்கு நான் எப்போதும் நன்றியுடையவனாக இருப்பேன்.
இன்று இங்கு கூடியிருக்கும் அனைவரும் எனது இசைக்காகவே வந்துள்ளனர். அது எனக்கு எல்லாவற்றையும் அர்த்தப்படுத்துகிறது. நான் தொடர்ந்து கடின உழைப்பை செலுத்தி, சிறந்த இசையை வழங்குவதில் கவனம் செலுத்த விரும்புகிறேன். 45 வினாடிகள் மட்டுமே ஸ்கிராட்ச் இசையை இசைத்துக் காட்டினேன்;
உடனே திங்க் மியூசிக் மகேஷுக்கு பிடித்துப்போனது. இந்த பாடலை அழகாக உயிர்ப்பித்த இயக்குநர் தேஜோ பரத்வாஜுக்கு நன்றி. நிகேத் பொம்மி காட்சி வடிவமைப்பில் வலுவான தூணாக இருந்தார். நடன இயக்குநர் ஷெரிஃப் மாஸ்டர் மற்றும் இந்த பாடலை அற்புதமாக்கிய முழு குழுவுக்கும் நன்றி. இவ்வாறு அவர் கூறினார்.
