தெலுங்கு முன்னணி நடிகர் ராம் சரண், தற்போது புச்சி பாபு சனா இயக்கத்தில் ‘பெத்தி’ என்ற பான் இந்தியா படத்தில் நடிக்கிறார். கிராமத்து பின்னணியில் ஆக்ஷன் படமாக உருவாகும் இதில் ஜான்வி கபூர், சிவராஜ்குமார், ஜெகபதி பாபு, ஷோபனா நடிக்கின்றனர். வரும் ஏப்ரல் 30ம் தேதி படம் திரைக்கு வருகிறது. ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்துள்ளார். ‘ஜிகிரி ஜிகிரி’ என்ற பாடல் வெளியாகி வைரலான நிலையில், 2வது பாடலாக ‘ராய் ராய் ரா ரா’ வெளியாகியுள்ளது. இப்பாடலில் ராம் சரணின் நடனம் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகிறது.
இந்நிலையில், ராம் சரணின் தந்தையும், தெலுங்கு மெகா ஸ்டாருமான சிரஞ்சீவி வெளியிட்டுள்ள பதிவில், ‘எனது மகனின் நடன அசைவுகளால் மிகவும் உற்சாகம் அடைந்துள்ளேன். ‘ராய் ராய் ரா ரா’ பாடல், திரையில் அனலை பறக்கவிடும். இது அற்புதமான ஆற்றல், உணர்ச்சி மற்றும் சினிமா புத்திசாலித்தனத்தின் கலவையாகும். ராம் சரண் சிரமமின்றி நேர்த்தியாகவும், மின்னல் வேகத்திலும் நடனமாடி இருப்பது எனக்கு மிகவும் பெருமையாக இருக்கிறது. அற்புதமாக படமாக்கிய புச்சி பாபு சனா, மாயாஜால இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், நடன இயக்குனர் ஜானி ஆகியோருக்கு எனது பாராட்டுகள்’ என்று பதிவிட்டுள்ளார்.
