சென்னை: தமிழில் ஸ்டண்ட் கலைஞராக அறிமுகமான பொன்னம்பலம், தொடர்ந்து பல்வேறு மொழிகளில் 200க்கும் மேற்பட்ட படங்களில் வில்லனாகவும், குணச்சித்திர வேடத்திலும் நடித்தார். இதற்கிடையே சொந்தப் படம் தயாரித்து இயக்கி நடித்தார். இந்நிலையில், கடந்த சில ஆண்டுகளாக சிறுநீரக பாதிப்பு காரணமாக மருத்துவ
மனையில் தங்கி சிகிச்சை பெற்ற அவர், போதிய பணம் இல்லாததால் நிதியுதவி கேட்டு ஒரு வீடியோ வெளியிட்டார். அவருக்கு பல்வேறு நடிகர்கள் நிதியுதவி செய்தனர். இந்நிலையில் அவர் அளித்துள்ள ஒரு பேட்டி இணையதளங்களில் வைரலாகி வருகிறது.
அது வருமாறு: நான் சினிமாவில் நடித்து பிரபலமானதில் அண்ணனுக்கு விருப்பம் இல்லை. என்மீது இருந்த காழ்ப்புணர்ச்சியின் காரணமாக, என் வீட்டு வாசலில் பில்லி சூனியம் வைப்பதற்காக பள்ளத்தை தோண்டினார். அன்று யதார்த்தமாக வெளியில் சென்று பார்த்தபோதுஅந்த உண்மை தெரிந்தது. எனது உதவியாளரை மிரட்டி பில்லி சூனியம் வைக்க சொன்னதுடன், நான் சாப்பிடும் ரசத்தில் ஒரு பொடியை கலந்து கொடுக்க திட்டமிட்டு இருந்தார். எனது பிறந்தநாள் அன்று குடிக்க பீர் வாங்கி வந்தார். அதில், ஸ்லோ பாய்சனை கலந்து கொடுத்துவிட்டார்.
அதை குடித்ததில் இருந்து எனக்கு தொடர்ந்து வயிற்றுப்போக்கு ஏற்பட்டது. இதனால் எனது உடல் மோசமாகி ஒல்லியானேன். பிறகு எனது கிட்னி பாதிக்கப்பட்டது. பீரில் குதிரை முடியை பொடி செய்து கலந்திருக்கிறார். அது எனது வயிற்றுப்பகுதியில் சென்று ஒட்டிக்கொண்டதால், தொடர்ந்து எனக்கு வயிற்றுப்போக்கு ஏற்பட்டது. எனது உடல்நிலையும் மோசமடைந்தது. சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை நடந்த பிறகு பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ள நான் மிகவும் கஷ்டப்படுகிறேன்.
