காயத்தைக் கண்டு கவலைப்படாத சம்யுக்தா

மலையாள நடிகை சம்யுக்தா மேனன், தமிழில் ‘களரி’, ‘ஜூலை காற்றில்’, ‘வாத்தி’ ஆகிய படங்களில் நடித்தார். பிறகு தெலுங்குக்கும், கன்னடத்துக்கும் சென்று சில ஹிட் படங்களை கொடுத்த அவர், தனது சம்பளத்தை உயர்த்தினார். திடீரென்று தனது பெயரிலுள்ள ‘மேனன்’ என்பதை நீக்கிவிட்டு, ‘சம்யுக்தா’ என்ற பெயரை பயன்படுத்தி வருகிறார். தெலுங்கில் ‘சுயம்பு’, விஜய் சேதுபதியுடன் ‘ஸ்லம்டாக்: 33 டெம்பிள் ரோடு’, மலையாளத்தில் மோகன்லாலுடன் ‘ராம்’, இந்தியில் ‘மகாராக்னி: குயின் ஆஃப் குயின்ஸ்’, தமிழில் லாரன்ஸுடன் ‘பென்ஸ்’ ஆகிய படங்களில் நடித்து வரும் அவர், தெலுங்கில் ‘தி பிளாக் கோல்ட்’ என்ற படத்தில் அதிரடி ஆக்‌ஷன் ஹீரோயின் வேடமேற்றுள்ளார்.

இது குறித்து சம்யுக்தா கூறுகையில், ‘இந்த படத்தில் சண்டைக்காட்சியில் நடிப்பதற்காக விசேஷ பயிற்சிகள் பெற்று, பல ரிஸ்க்கான காட்சிகளில் ‘டூப்’ போடாமல் ஒரிஜினலாக நடித்த நான், அவ்வப்போது எனது உடலில் காயங்கள் ஏற்பட்டபோதும் பயப்படாமல் சிகிச்சை பெற்றதோடு, அதிக நேரம் ஓய்வெடுக்காமல் நடித்தேன். ஆக்‌ஷன் சீன்களில் ஏற்பட்ட விபத்தில் சிக்கி காயங்கள் ஏற்பட்டாலும், அதை ஒரு சவாலாக எடுத்துக்கொண்டு நடித்தேன். இயக்குனர் யோகேஷ் கேஎம்சி முன்கூட்டியே எச்சரித்து, நிறைய காட்சிகள் மிகவும் ஆபத்தானவை என்றார்.

எனினும், நானே நடிப்பேன் என்று அடம்பிடித்தேன். இப்படம் வெற்றிபெற்றால், தொடர்ந்து ஆக்‌ஷன் கதைகளில் நடிக்க முன்னுரிமை தருவேன். தமிழில் வாய்ப்புகள் வருகின்றன. ஆனால், நான் எதிர்பார்த்த கேரக்டர் அமையவில்லை. நல்ல கதையும், கேரக்டரும் கிடைத்தால் மீண்டும் தமிழில் நடிப்பேன்’ என்றார்.

Related Stories: