சென்னை: செல்வராகவன் இயக்கிய ‘புதுப்பேட்டை’ படத்தில் நடித்தபோது சோனியா அகர்வாலை அவர் காதலித்தார். 2006 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். அதன் பிறகு குடும்பப் பிரச்னையின் காரணமாக இருவரும் 2009ல் விவாகரத்து செய்து கொண்டனர். அதன் பிறகு செல்வராகவன் தனிமையிலிருந்து வந்தார்.
‘மயக்கம் என்ன’ படத்தின் படப்பிடிப்பில் அசிஸ்டன்ட் இயக்குனராக பணிபுரிந்திருந்தவர் கீதாஞ்சலி. அவரை செல்வராகவனுக்கு பிடித்து போக, அவர் மீது காதல் கொண்டு இருவரும் காதலித்து 2011ல் திருமணம் செய்து கொண்டனர். இவர்கள் இருவருக்கும் மூன்று குழந்தைகள் பிறந்தது. ஒரு மகள், இரண்டு மகன்கள். தம்பதி சந்தோஷமாக வாழ்ந்து வந்த நிலையில் தற்போது இவர்களுக்கிடையே ஏதோ பிரிவு ஏற்பட்டதாக சினிமா வட்டாரங்களில் பரவலாக பேசப்படுகிறது. இதற்கு முக்கிய காரணம் செல்வராகவனின் புகைப்படங்களை கீதாஞ்சலி தனது சமூக வலைத்தள பக்கங்களில் இருந்து நீக்கியது தான். இதே போன்று செல்வராகவனும் கீதாஞ்சலியின் புகைப்படங்களை நீக்கியுள்ளதாக சொல்லப்படுகிறது.
செல்வராகவன் பேட்டி ஒன்றில் தனது மன வலியுடன் சில வார்த்தைகளை கூறியுள்ளார். ‘‘நான் மிக மோசமான காலகட்டத்தில் இருந்து விலகி வந்து உட்கார்ந்து இருக்கிறேன். கிட்டத்தட்ட செத்துப் பிழைத்து இருக்கிறேன் என்று கூறலாம். இதற்கு என்ன காரணம் என்று நான் இப்போது சொல்ல மாட்டேன். ஆனால், எப்படியும் இன்னும் சில நாட்களுக்குள் உங்களுக்கு தெரியும்’’ என்று கூறியுள்ளார். அவர் கூறியதற்கும் இப்போது கீதாஞ்சலி தனது கணவரின் புகைப்படங்களையும் நீக்கியதையும் வைத்து பார்க்கையில் இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்து செல்ல இருப்பது உறுதிதான் என நெட்டிசன்கள் கூறுகின்றனர்.

