சென்னை: கடந்த 2003-ம் ஆண்டு ஹரி இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் வெளியான படம் ‘சாமி’. இந்தப் படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இதில் ‘பெருமாள் பிச்சை’ என்ற வில்லன் கதாபாத்திரத்தில் தனது தனித்துவ நடிப்பால் ரசிகர்களின் கவனம் ஈர்த்தவர் நடிகர் கோட்டா சீனிவாச ராவ். தெலுங்கு நடிகரான அவருக்கு தமிழில் இது தான் முதல் படம். தொடர்ந்து அவர் தமிழில், ‘குத்து’, ‘ஜோர்’, ‘ஏய்’, ‘திருப்பாச்சி’, ‘பரமசிவன்’, ‘சத்யம்’, ‘கோ’, ‘சாமி 2’, ‘காத்தாடி’ என பல படங்களில் நடித்து தனது வில்லத்தனத்தால் பாராட்டப்பட்டவர் கோட்டா சீனிவாச ராவ்.
நடிகர், பாடகர், டப்பிங் கலைஞர் என பன்முக திறமை கொண்ட இவர், மொத்தம் 750 படங்களுக்கும் மேல் நடித்துள்ளார். நாட்டின் உயரிய விருதான பத்மஸ்ரீ விருது பெற்றவர் கோட்டா சீனிவாச ராவ்.1999 – 2004ம் ஆண்டு வரை விஜயவாடா தொகுதி எம்எல்ஏவாக இருந்துள்ளார். சிறிது காலமாக படங்களில் இருந்து விலகி இருந்தார். பிறகு அவரைப் பற்றிய எந்த தகவலும் இல்லை. அவர் இறந்துவிட்டார் என திடீரென தகவல் பரவியது. ஆனால் அதை யாராலும் உறுதி செய்ய முடியவில்லை. இந்நிலையில் தற்போது அவரது லேட்டஸ்ட் புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகியுள்ளது.
வயது மற்றும் உடல்நலக் காரணங்களால் தற்போது அவர் நடக்க முடியாமல் தவிப்பதைக் கண்டு ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். இந்த புகைப்படத்தில் காணப்படும் கோட்டா ஸ்ரீனிவாச ராவின் நிலையைப் பார்த்து நெட்டிசன்களும் ரசிகர்களும் கவலை தெரிவித்துள்ளனர். உடல்நலக் குறைவால் அவர் மிகவும் உடல் மெலிந்து காலில் கட்டுடன் மற்றொரு காலில் காயத்துடன் காணப்படுவதால், ரசிகர்கள் வருத்தம் அடைந்துள்ளனர். இந்த புகைப்படத்தை தெலுங்கு தயாரிப்பாளர் ஒருவர் சமீபத்தில் அவரை சந்தித்தபோது எடுத்திருக்கிறார். அவர்தான் இதை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார்.