உருவ கேலிக்கு ஆளான நிவேதா தாமஸ்

தெலங்கானா மாநிலத்தில் முதல்முறையாக திரைத்துறை விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விருதுகள் வழங்கும் விழா வரும் 14ம் தேதி நடக்கிறது. இதில் சிறந்த நடிகர் விருது அல்லு அர்ஜூனுக்கு வழங்கப்படுகிறது. ‘புஷ்பா 2: தி ரூல்’ என்ற படத்துக்காக இவ்விருது அவருக்கு கிடைத்துள்ளது. ‘35 இதி சின்ன கத காது’ என்ற படத்துக்காக சிறந்த நடிகையாக நிவேதா தாமஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளார். நந்தா கிஷோர் இயக்க, சரஸ்வதி என்ற கதாபாத்திரத்தில், இரண்டு குழந்தைகளுக்கு தாயாக நிவேதா தாமஸ் நடித்தார். இதற்காக அவர் தனது உடல் எடையை அதிகரிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

இதை தொடர்ந்து படத்தை விளம்பரப்படுத்தும் நிகழ்ச்சிகளுக்கு வந்த நிவேதா தாமஸின் பருமனான உடல் தோற்றத்தை வைத்து, சமூக வலைத்தளங்களில் பலர் அவரை கடுமையாக உருவ கேலி செய்தனர். அவருக்கு உடல்நல பிரச்னை காரணமாகவே உடல் எடை கூடியதாக சிலர் அவதூறு கமென்ட்டுகளை பதிவிட்டனர். இதனால் கடும் மன உளைச்சலுக்கு ஆளான நிவேதா தாமஸ், தனக்கு ஆதரவாக யாரும் பேசாதது குறித்து மிகவும் வருத்தப்பட்டார். எனினும், அனைத்து விமர்சனங்களையும் புறக்கணித்த அவர், ‘35 இதி சின்ன கத காது’ படத்தில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தினார். இந்நிலையில், சிறந்த நடிகைக்கான தெலங்கானா அரசு விருதுக்கு அவர் தேர்வு செய்யப்பட்டு, தன்னை கிண்டல் செய்தவர்களின் முகத்தில் கரியை பூசியுள்ளார்.

Related Stories: