×

நாளை என்றில்லை நரசிம்மரிடத்தில்...


இறைவன் தூணிலும் இருப்பான், துரும்பிலும் இருப்பான் என்பதை உலக உயிர்களுக்கு மெய்ப்பித்துக் காட்டியது திருமாலின் திரு அவதாரமான ஸ்ரீ  நரசிம்மமூர்த்திகள். அப்படியான நரசிம்மர் பல திருத்தலங்களில் பல வடிவங் களில் கோவில் கொண்டெழுந்து, பல அற்புதங்களை செய்து, திருவருள் புரிந்து வருகின்றார். அவ்வாறாக ஸ்ரீ  நரசிம்மர் லட்சுமி நரசிம்மராக, சுயம்புவாக மலை மீது எழுந்தருளும் ஓர்
உன்னத திருத்தலம்தான், போளூர் சம்பத்கிரி.தொண்டை மண்டலத்தின் பல்குன்ற கோட்டத்தின் ஒரு பகுதியாக விளங்கிய போளூர் ஆதியில் புலஸ்திய மகரிஷி தவமியற்றியதால் “புலஸ்தியபுரம்”  என்று அழைக்கப்பட்டுள்ளது. இந்நகரின் மேற்கே அமைந்துள்ள மலையே சம்பத்கிரி ஆகும். இம்மலையில், நரசிம்மர் குபேரனுக்கு சம்பத்துகளை கொடுத்தருளியதால் சம்பத்துக்களை வாரி வழங்கும் சம்பத்கிரி என்று பெயர் உருவானது. சம்பத் என்றால் பொருள் என்கிற அர்த்தத்தில் சம்பத்கிரிக்கு கீழே அமைந்த ஊர் “பொருளூர்” என்று அழைக்கப்பட்டு, அது மருவி தற்போது போளூர் என்று அழைக்கப்படுகின்றது.

சந்திரன் வழிபட்ட இத்தல ஈசனான ஸ்ரீ  சோமநாதரைத் திருப்புகழில் குறிப்பிட்டுள்ளார் அருணகிரிநாதர். முருகப் பெருமானால் உண்டான பாஹுநதி என்னும் சேயாற்றின் வடகரையில் போளூர் அமைந்துள்ளது. மகிமைமிக்க சித்தர்கள் பலர் வாழ்ந்த புனித பூமி போளூர் என்பது குறிப்பிடத்தக்கது.திருக்கோவிலூர் தபோவனம் ஞானானந்தகிரி சுவாமிகள், ஹரிதாஸ் ஸ்வாமி, இசை மேதை அச்சுததாசர், மகான் விட்டோபா சுவாமிகள், வெட்டவெளி சுவாமிகள் என பலர் இந்த சம்பத்கிரி நரசிம்மரை வழிபட்டு, பாடல்கள் புனைந்து பாடியுள்ளனர். ஸ்ரீ  சங்கர்ஷணவுடையார் பாஹு நதிக்கரையில் அமைந்துள்ள ஊரான கரைப்பூண்டியில் சம்பத்கிரியின் நிழலில் ஜீவ சமாதியானார். சம்பத்கிரியை ஒட்டி மேற்குப்புறமாக சப்தரிஷி மண்டல மலையுள்ளது. இம்மலையில், சப்த ரிஷிகள் தவம் புரிந்ததாக ஐதீகம் உள்ளது. இம்மலையில் புலஸ்தியர் மற்றும் பௌலஸ்தியர் ஆகிய இரு மகரிஷிகள் திருமாலை நோக்கி தவம் புரிந்து வந்தனர். தவத்தின் பயனாக கோவிந்தனிடமிருந்து ஒரு மாம்பழம் பிரசாதமாக கிடைத்தது. அதை பங்கிடும் போட்டியில் பௌலஸ்தியரின் இரண்டு கரங்களும் சிதைந்தன. பௌலஸ்தியர் இம்மலைக்கு மூன்று மைல் தொலைவில் உள்ள சேய்யாற்றில் (செய்யாறு) தினமும் நீராடி, ஒரு மண்டலம் (48 நாட்கள்) நரசிம்மரை நினைத்து, இம்மலையினை கிரிவலம் வந்தார். 48ம் நாள் சேய்யாற்றில் மூழ்கி எழுந்தபோது அவரது சிதைந்த கைகள் கூடி, அவர் கரங்களில் ஸ்ரீ நரசிம்மர் விக்ரஹமும் கிடைத்தது. அந்த விக்ரஹத்தை ஊருக்குள் பிரதிஷ்டை செய்யும்படி அசரீரி சொல்லிட... அதன்படியே ஊருக்குள் பிரதிஷ்டை செய்தார்.

சுமார் 2000 ஆண்டுகள் பழமை வாய்ந்த இம்மலையின் உச்சியில் கல் உடைக்கும்போது உளிபட்ட இடத்திலிருந்து ரத்தம் பீறிட்டது. அதைக் கண்டு அஞ்சிய மக்கள் அனைவரும் அலறியடித்துக் கொண்டு ஓடினர். அன்றே ஊரில் இருந்த ஒரு மகானுபாவர் கனவில் தோன்றிய பெருமாள், தான் இங்கு லக்ஷ்மி நரசிம்மராக, சுயம்பு வடிவில் எழுந்தருளி உள்ளதாகக் கூறி மறைந்தார். பின்னர் ஆலயம் எழுப்பப்பட்டு, வழிபாடுகள் இன்றுவரை சிறப்புடன் நடந்து வருகின்றது. முதலில் மலை மீது சுயம்புவாக எழுந்தருளும் ஸ்ரீ நரசிம்ம மூர்த்திக்கு ஹொய்சாளர்கள் ஆலயம் எழுப்பினர். பின்னர் விஜயநகர அரசர்களால் திருப்பணிகளும் செய்யப்பட்டுள்ளன. பின்னாளில் விஜயநகர வம்சத்தில் வந்த ஓகூர் ஸ்ரீ நிவாச ராவ் என்பவர் உற்சவர் நரசிம்மரோடு ஸ்ரீ  தேவி - பூதேவி தாயார்களின் விக்ரஹத்தையும் ஸ்தாபித்தார். அதோடு பாமா - ருக்மிணி உடனான ஸ்ரீ  வேணுகோபால சுவாமியையும் கற்சிலையாக நிறுவி, சம்ப்ரோக்ஷணம் நடத்தினார். மலைக்கோவிலுக்கும் திருப்பணிகள் செய்தார்.

ஒரு சமயம் திப்புசுல்தான் போருக்காக இங்கு தங்கியிருந்தபோது சம்பத்கிரி மலையில் மணி ஓசை கேட்டு போர் புரியாமல் மனம் மாறி, இங்கிருந்து சென்றதாக கல்வெட்டுச் செய்தி கூறுகின்றது. நகரின் மேற்கே நெடிதுயர்ந்த இந்த சம்பத்கிரி சுமார் 850 படிகளைக் கொண்டது. மலையடிவாரத்தில் சிறிய திருவடிகளான ஸ்ரீ ஆஞ்சநேயர் சந்நதி அமைந்துள்ளது. நான்கு ஓய்வு மண்டபங்கள் உள்ளன. இரண்டு குளிர்ந்த நீர் சுனைகள் காணப்படுகின்றன. மேலே ஏற, ஏற செங்குத்தான படிகள் அமைந்துள்ளன. அங்கிருந்து கீழே பார்க்க தலைசுற்றும். கீழே பார்க்காமல் ஏற வேண்டும். மலை உச்சியில் அரண் அமைப்பு போல் சுற்றிலும் மதில்கள் அமைந்துள்ளன. நடுவே தென்முகம் பார்த்த பெருமாள் ஆலயம் அமைக்கப்பட்டுள்ளது. பலிபீடம், தீபஸ்தம்பம் மற்றும் கருடாழ்வார் சந்நதி அமைந்துள்ளன. மின்னொளியில் சங்கு - சக்கரத்துடனான திருநாமம் பிரமாண்டமாக அமைக்கப்பட்டுள்ளது.

கருவறையுள் சுயம்பு வடிவில் தென்முகமாக அருணாசலம் என்னும் திருவண்ணாமலையை பார்த்தபடி ஸ்ரீ நரசிம்மர் காட்சியளிக்கின்றார். முன்னே ஸ்ரீ லட்சுமி தேவியுடன் நரசிம்மமூர்த்தி சிலா ரூபமாக ஸ்தாபிக்கப்பட்டுள்ளார். வலது புறம் கனக வள்ளித் தாயாருக்கும் தனியே சந்நதி அமைக்கப்பட்டுள்ளது. மலைமீது பிரம்ம தீர்த்தமும், கீழே புலஸ்திய தீர்த்தமும் அமைந்துள்ளன. பாஹு நதியென்னும் செய்யாறும் இத்தலத்தின் தீர்த்தமாகும். இந்த மலைத்தல தரிசனத்தில் ரம்யமான இறையனுபவம் கிடைக்கும் என்பதில் ஐயமில்லை. சுவாதி, மாதப்பிறப்பு, ஏகாதசி, திருவோணம், புனர்பூசம், ரோகிணி, பஞ்சமி, சப்தமி ஆகிய நாட்களில் அதிகாலை 4.30 மணிக்கு மலை மீது திருமஞ்சனம் நடைபெறுகின்றன.

சித்திரை வருடப் பிறப்பில் படி விழா, வைகாசி பத்துநாள் பிரம்மோற்சவம், ஆவணியில் ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி, புரட்டாசி சனிக் கிழமைகள், தனுர் (மார்கழி) மாத பூஜைகள், ஸ்ரீ  வைகுண்ட ஏகாதசி போன்றவைகளோடு கீழேயுள்ள வேணுகோபாலர் ஆலயத்திலும் அனேக வைஷ்ணவ விசேஷங்கள் சிறப்புற நடைபெறுகின்றன.வருடத்தின் முக்கிய விசேஷமாக, சித்ரா பௌர்ணமியன்று கீழ்க்கோவிலில் உள்ள ஸ்ரீ தேவி - பூதேவி சமேத ஸ்ரீ  நரசிம்ம மூர்த்திக்கு சிறப்பு அபிஷேக அலங்காரம் செய்யப்பட்டு, ஐந்து கிலோமீட்டர் தொலைவிலுள்ள கரைப்பூண்டிக்குச் சென்று பெருமாள் தீர்த்தம் கொடுக்கும் தீர்த்தவாரி உற்சவம் சிறப்பாக நடைபெறுகின்றது.திருமண வரம், புத்திரப்பேறு, அரசு வேலை, கடன் நிவர்த்தி, தொழில் முன்னேற்றம் மற்றும் அமானுஷ்ய - மாந்திரீக தொல்லைகளிலிருந்து விடுபட, பிரதி மாதம் பிரதோஷத்தன்று சம்பத்கிரி ஸ்ரீ  லக்ஷ்மி நரசிம்மருக்கும், ஊரில் உள்ள ஸ்ரீ  பாமா - ருக்மிணி சமேத வேணுகோபால சுவாமி மற்றும் உற்சவர் நரசிம்மருக்கும் திருமஞ்சனம் செய்து, துளசி மாலை சாற்றி, பானகம் மற்றும் வெல்லத்தினால் ஆன பட்சணங்களை நிவேதனம் செய்து, கிரிவலம் வந்து வழிபட்டு, உரிய பலன் பெற்றிடலாம். வைகானச ஆகம முறைப்படி பூஜைகள் நடந்திடும். இங்கு தினமும் கீழ் கோவில் நரசிம்மருக்கு நிவேதிக்கும் பானகத்தை பிரசாதமாக பருகிட, எல்லாவித ரோகங்களில் இருந்தும் விடுபடலாம்.பிரதி சனிக்கிழமைகளில் அதிகாலை 4.30 மணி முதல் 6 மணி வரை மட்டுமே மலைக் கோவில் திறந்திருக்கும். அச்சமயம் சிறப்பு பூஜைகள் நடத்தப்படுகின்றன. ஊரில் உள்ள ஸ்ரீ  வேணுகோபாலர் ஆலயம், தினமும் காலை 6 மணி முதல் 8.30 மணி வரையும், மாலை 5 மணி முதல் 8 மணி வரையும் திறந்திருக்கும்.திருவண்ணாமலை மாவட்டம், போளூர் நகரின் மேற்கு அமைந்துள்ளது சம்பத்கிரி.

Tags : Narasimhar ,
× RELATED நன்மை தரும். நரசிம்மர் வழிபாடு