மக்கள் குறைதீர் கூட்டத்தில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்

*கலெக்டர் வழங்கினார்

ஈரோடு : ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர் கூட்டத்தில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் கந்தசாமி வழங்கினார்.ஈரோடு கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் வாராந்திர மக்கள் குறைதீர் கூட்டம் நேற்று நடைபெற்றது.

கூட்டத்திற்கு கலெக்டர் கந்தசாமி தலைமை தாங்கினார். இதில், கலைஞர் மகளிர் உரிமைத்தொகை, விதவை உதவித்தொகை, கருணை அடிப்படையில் வேலை, மாற்றுத்திறனாளிகளுக்கு கல்வி உதவித்தொகை, கலைஞரின் கனவு இல்லம், இலவச வீட்டுமனை பட்டா, பட்டா மாறுதல், ஆக்கிரமிப்பு மற்றும் காவல் துறை நடவடிக்கை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் என மொத்தம் 380 மனுக்கள் வரப்பெற்றன.

மனுக்களை பெற்ற கலெக்டர் உரிய துறை அலுவலர்களிடம் வழங்கி, உடனடி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். மேலும், முதலமைச்சர் தனிப்பிரிவு மனுக்கள், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பெறப்பட்ட மனுக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

இந்த கூட்டத்தில் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரப்பினர் நலத்துறை சார்பில் சீர்மரப்பினர் நல வாரியத்தில் பதிவு பெற்ற 5 நபர்களுக்கு உறுப்பினர் அடையாள அட்டைகளையும், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை சார்பில் 5 நபர்களுக்கு தலா ரூ.6,700 வீதம் ரூ.33,500 மதிப்பில் விலையில்லா சலவைப் பெட்டிகளும் வழங்கினார்.

பெருந்துறை தாலுகா பள்ளபாளையம் பகுதியை சேர்ந்த தீ விபத்தில் இறந்த தங்காள் என்பவரின் மகன் குணசேகரனுக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியாக ரூ.1 லட்சத்திற்கான காசோலை என மொத்தம் 11 பயனாளிகளுக்கு ரூ.1.35 லட்சம் மதிப்பில் அரசு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.

இந்த கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சாந்த குமார், சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியர் செல்வராஜ், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் ராஜகோபால், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் நூர்ஜஹான், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் பூபதி உட்பட அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

The post மக்கள் குறைதீர் கூட்டத்தில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் appeared first on Dinakaran.

Related Stories: