அரியலூர், ஜூலை 29: அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற மக்கள் குறைதீர்நாள் கூட்டத்தில் 330 மனுக்கள் பெறப்பட்டது. மாணவிக்கு சக்கர நாற்காலி உள்பட 11 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் ரத்தினசாமி வழங்கினார். அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் ரத்தினசாமி, தலைமையில் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் வருகை தந்து கோரிக்கை மனுக்கள் அளித்தனர். முதியோர் உதவித் தொகை, இலவச வீட்டு மனைப்பட்டா, மாற்றுத்திறனாளி உதவித்தொகை, தொழில்கடன், பசுமை வீடு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 330 மனுக்கள் பொதுமக்களிடமிருந்து மாவட்ட கலெக்டர் பெற்றுக்கொண்டார். இம்மனுக்கள் மீது சம்மந்தப்பட்ட துறை அலுவலர்கள் உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டது.
இம்முகாமில் சக்கர நாற்காலி வேண்டி மனு அளித்த பள்ளி மாணவிக்கு உடனடியாக மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் சார்பில் சக்கர நாற்காலியை கலெக்டர் வழங்கினார். முன்னதாக, தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) அரியலூர் சார்பில், தமிழ்நாடு தூய்மை பணியாளர்கள் நல வாரியம் நலத்திட்ட உதவியாக 1 பயனாளிக்கு ரூ.1,000 ஓய்வூதியமாகவும், 1 பயனாளிக்கு ரூ.3,000 திருமண உதவித்தொகையும், 9 பயனாளிகளுக்கு ரூ.28,000 மதிப்பில் கல்வி உதவித்தொகை என மொத்தம் 11 பயனாளிகளுக்கு ரூ.32,000 மதிப்பில் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் ரத்தினசாமி வழங்கினார். இந்த குறைதீர் கூட்டத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் முனைவர் சிவராமன், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் திட்ட இயக்குநர் ரவிச்சந்திரன், மாவட்ட நிலை அலுவலர்கள் மற்றும் அனைத்துதுறை அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
The post அரியலூர் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்நாள் கூட்டம் appeared first on Dinakaran.
