மாஜி அமைச்சர் மீது இபிஎஸ் அதிருப்தி சர்ச்சையில் சிக்கிய அதிகாரி அதிமுகவில் இணைந்தார்

திண்டிவனம், ஜூலை 28: சர்ச்சையில் சிக்கிய ஓய்வு பெற்ற அதிகாரி அதிமுகவில் இணைந்தார். அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு தெரியாமல் இணைப்பு விழா நடத்தியதால் மாஜி அமைச்சர் மீது கடும் அதிருப்தியில் இருப்பதாக தகவல்கள் ெவளியாகி உள்ளது. தமிழகத்தில் சமீப காலமாக அரசியல் கட்சிகளில் குற்றப் பின்னணி கொண்டவர்கள் தங்களை பாதுகாக்க பாஜ, அதிமுகவில் இணைந்து வருவதாக விமர்சனங்கள் வந்தது. குறிப்பாக தேசிய கட்சியான பாஜகவையும், அடுத்தபடியாக அதிமுகவிலும் இணையும் போக்கு நடந்து வருகின்றன.

இந்நிலையில் விழுப்புரம் மாவட்டத்தில் அதிமுகவில் ஓய்வு பெற்ற ஏடிஎஸ்பி நேற்று மாஜி அமைச்சர் சிவி சண்முகம் முன்னிலையில் திண்டிவனத்தில் அவரது இல்லத்தில் சந்தித்து அதிமுகவில் இணைந்தார். கடந்த அதிமுக ஆட்சியில் அதிகாரம் மிக்கவராக செயல்பட்ட இவர் மீது பல்வேறு புகார்கள் எழுந்தன. குறிப்பாக விழுப்புரம் மாவட்டத்தில் எஸ்ஐ பணி தொடங்கி, இன்ஸ்பெக்டர், டிஎஸ்பி, ஏடிஎஸ்பி என எல்லா பதவிகளிலும் ஒரே மாவட்டத்தில் தனது செல்வாக்கை பயன்படுத்தி காவல் துறையில் பணியாற்றி வந்தார். அப்போதைய டிஜிபியுடன் ஏதோ ஒரு வகையில் மிக நெருக்கமாக இருந்ததால் அதிகாரம் மிக்கவராக செயல்பட்டதாக கூறப்பட்டது.

அவர் பணிபுரிந்த காலத்தில்தான் விழுப்புரத்தில் மூன்று நம்பர் லாட்டரியில் ஒரு குடும்பமே தற்கொலை செய்து கொண்டது. பெட்ரோல் பங்கில் வெடிகுண்டு வீசி கொலை இப்படி பல்வேறு குற்ற சம்பவங்கள் நடந்த போதும் இவரை இடமாற்றம் செய்யாமல் மிக செல்வாக்கோடு இங்கேயே பதவி வகித்தார். பின்னர் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் அடிப்படையில் நாகை கடலோர காவல் படைக்கு இடமாற்றம் செய்யப்பட்டிருந்தார். இந்நிலையில் கடந்த 2023ம் ஆண்டு ஜூலை மாதம் இவர் ஓய்வு பெற்றார். ஏடிஎஸ்பியாக பணியில் இருந்த காலத்தில் தனது செல்வாக்கை பயன்படுத்தி ஓய்வு பெற்ற பெண் ஐபிஎஸ் அதிகாரியின் குடும்பத்தை சேர்ந்த பெண்ணுடன் பப்புக்கு அழைத்துச் சென்றது. பின்னர் இது ெதாடர்பான ஏடிஎஸ்பியிடம் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இது தொடர்பாக அப்போதைய டிஜிபியிடமும், நீதிமன்றத்திலும் புகார் அளிக்கப்பட்டது. தமிழகத்தில் அதிர்வலையை ஏற்படுத்தி ஓய்வு பெற்ற ஏடிஎஸ்பி தற்போது அதிமுகவில் இணைந்துள்ளார். பணியில் ஓய்வு பெற்ற பின்னர் தன்னை பாதுகாத்துக் கொள்ள அரசியலில் சேர பாஜவுடனும், புதிதாக கட்சி தொடங்கிய நடிகர் விஜய் கட்சியுடனும் சேர்வதற்கு திட்டமிட்டிருந்தார். ஆனால் தற்போது அதிமுகவில் முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் முன்னிலையில் இணைந்துள்ளார். விழுப்புரம் மாவட்டத்திற்கு கடந்த சில வாரங்களுக்கு முன்பு வந்திருந்த எடப்பாடி பழனிச்சாமி, அதிமுகவில் குற்றப்பின்னணி கொண்டவர்கள் இல்லை.

எப்போதும், நாங்கள் அவர்களை சேர்க்க மாட்டோம் என்று கூறிவிட்டு சென்றார். அவர் கூறிய சில நாட்களிலேயே சர்ச்சையில் சிக்கிய காவல் அதிகாரியை அதிமுகவில் இணைத்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏடிஎஸ்பியை அதிமுகவில் இணைக்க அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி ஒப்புதல் அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இருப்பினும் மாஜி அமைச்சர் தன்னுடைய இல்லத்தில் இணைப்பு விழா நடத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறதாம். மாஜி அமைச்சர் மீதும் இபிஎஸ் அதிருப்தியில் இருக்கிறாராம். கட்சியில் இணைந்த அவரை நீக்கவும் முடிவு எடுத்து வருவதாக கூறப்படுகிறது.

The post மாஜி அமைச்சர் மீது இபிஎஸ் அதிருப்தி சர்ச்சையில் சிக்கிய அதிகாரி அதிமுகவில் இணைந்தார் appeared first on Dinakaran.

Related Stories: