×

பொதுமக்கள் அளித்த மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவு வாராந்திர குறைதீர்வு கூட்டத்தில்

திருவண்ணாமலை, ஜூலை 22: வாராந்திர குறைதீர்வு கூட்டத்தில் பொதுமக்கள் அளித்த மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு கலெக்டர் தர்ப்பகராஜ் உத்தரவிட்டுள்ளார். திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் வாராந்திர மக்கள் குறைதீர்வு கூட்டம் கலெக்டர் தர்ப்பகராஜ் தலைமையில் நேற்று நடந்தது. அதில் டிஆர்ஓ ராம்பிரதீபன், ஆர்டிஓ ராஜ்குமார், சப்-கலெக்டர் (பயிற்சி) அம்ருதா எஸ்.குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில், கல்வி உதவித் தொகை, வங்கிக் கடனுதவி, முதியோர் உதவித் தொகை, வீட்டுமனைப்பட்டா, சாதிச்சான்று, வேலைவாய்ப்பு, விதவை உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித் தொகை மற்றும் உபகரணங்கள், கலைஞரின் வீடு வழங்கும் திட்டம், சாலை வசதி, குடிநீர் வசதி, தாட்கோ கடனுதவி, பயிர் கடன் உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 616 மனுக்களை பொதுமக்கள் அளித்தனர்.

பொதுமக்கள் அளித்த மனுக்கள் மீது, விரைந்து நடவடிக்கை எடுத்து தீர்வு காணுமாறு அதிகாரிகளுக்கு கலெக்டர் தர்ப்பகராஜ் உத்தரவிட்டார். மேலும், கடந்த வாரங்களில் பெறப்பட்ட மனுக்கள் மற்றும் முதல்வரின் தனிப்பிரிவில் இருந்து பெறப்பட்ட மனுக்கள் மீதான நடவடிக்கைகள் குறித்து ஆய்வு நடத்தினார். மேலும், கலெக்டர் அலுவலக தரைதளத்தில் மனு அளிக்க காத்திருந்த மாற்றுத்திறனாளிகளை நேரில் சந்தித்து கலெக்டர் மனுக்களை பெற்று விசாரணை நடத்தினார்.

அப்போது, மாற்றுத் திறனாளிகள் கோரிக்கை மனுக்கள் மீது உடனுக்கு உடன் தீர்வுகாண வேண்டும் என உத்தரவிட்டார். அதேபோல், வந்தவாசி தாலுகா தெள்ளார் ஒன்றியம் நல்லூர் கிராமத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்க வலியுறுத்தி இருபதுக்கும் மேற்பட்ட விவசாயிகள் நேற்று கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிக்க வந்தனர்.

அந்த மனுவில், வந்தவாசி தாலுகா தெள்ளார் ஒன்றியம் நல்லூர் கிராமத்தில் வசிக்கும் மக்கள் விவசாயத்தை நம்பியே உள்ளனர். தற்போது சொர்ணவாரி பட்டத்தில் நெல் பயிர் செய்துள்ளனர். அதேபோல், நல்லூர் சுற்றியுள்ள கிராமங்களில் அதிக அளவில் நெல் பயிர் சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். எனவே, நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை திறக்குமாறு கேட்டுக்கொள்கிறோம் என மனுவில் தெரிவித்துள்ளனர். வழக்கம்போல, தீக்குளிக்க முயற்சிக்கும் சம்பவங்களை தடுக்க, போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். பொதுமக்கள் கொண்டு வந்த பை, பொருட்கள், குடிநீர் பாட்டில்கள் போன்றவற்றை சோதித்த பிறகே அலுவலகத்துக்குள் அனுமதித்தனர்.

The post பொதுமக்கள் அளித்த மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவு வாராந்திர குறைதீர்வு கூட்டத்தில் appeared first on Dinakaran.

Tags : Tiruvannamalai ,Collector ,Tharpukaraj ,Tiruvannamalai Collector's Office ,Dinakaran ,
× RELATED மானுடத்தை நேசித்தவர் மகாகவி பாரதி...