மக்கள் குறைதீர் கூட்டத்தில் 18 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனைப்பட்டா

பெரம்பலூர், ஜூலை. 22: பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த பொது மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 18 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனைப்பட்டாவை மாவட்டக் கலெக்டர் வழங்கினார்.
பெரம்பலூர் மாவட்டக் கலெக்டர் அலுவலகக் கூட்ட அரங்கில் நேற்று மக்கள்குறைதீர் கூட்டம் நடந்தது. மாவட்டக் கலெக்டர் அருண்ராஜ் தலைமை வகித்தார். பெரம்பலூர் மாவட்ட வருவாய் அலுவலர் வடிவேல் பிரபு முன்னிலை வகித்தார். இதில் மாற்றுத் திறனாளிகள் இருக்கும் இடத்திற்கே மாவட்டக் கலெக்டர் நேரில் சென்று கோரிக்கை மனுக்களைப் பெற்றுக்கொண்டார்.

பின்னர் தமிழ்நாடு முதலமைச்சரின் தனிப்பிரிவு மனுக்கள், அமைச்சர்கள் கலந்து கொண்ட நிகழ்ச்சிகளில் பொதுமக்கள் வழங்கிய கோரிக்கை மனுக்கள், மக்கள் தொடர்பு திட்ட முகாம்கள் மற்றும் கடந்த வாரங்களில் நடைபெற்ற பொது மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டங்களில் பொது மக்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும், ஒரு மாதத்திற்கு மேலாக நடவடிக்கை எடுக்கப்படாத மனுக்களின் விவரங்களையும், சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் மாவட்டக் கலெக்டர் அருண்ராஜ் ஆய்வு மேற்கொண்டார்.

தொடர்ந்து, முதியோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, தொழில் தொடங்க கடன் உதவி, வீட்டுமனைப் பட்டா, விதவை உதவித்தொகை, ஆதரவற்றவற்றோர் உதவித்தொகை, பட்டா மாறுதல், கல்விக் கடன் கோருதல், இலவச தையல் இயந்திரம் கோருதல், கலைஞர் மகளிர் உரிமை தொகைத் திட்டம், கலைஞர் கனவு இல்லம் திட்டம், அடிப்படை வசதிகள் கோருதல் உட்பட பல்வேறு கோரிக்கை மனுக்களை பொது மக்களிடமிருந்து பெற்றுக்கொண்ட கலெக்டர், மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை மேற்கொள்ளவும், மாற்றுத்திறனாளிகள் மனுக்கள் மீது தனிக்கவனம் செலுத்திடுமாறும், அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

இந்நிலையில் நேற்று நடைபெற்ற பொது மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாற்றுத் திறனாளிகள் மற்றும் பொது மக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 426 மனுக்கள் பெறப்பட்டது. முன்னதாக வருவாய்த்துறை, தொழிலாளர் நலத்துறை, பிற்படுத்தப்பட்டோர் நலத் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் மூலம் 18 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனைப்பட்டா உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகளை மாவட்டக் கலெக்டர் வழங்கினார்.

இதில், பெரம்பலூர் மாவட்ட சமூக பாதுகாப்புத் திட்ட தனித் துணை கலெக்டர் சொர்ணராஜ், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் சுரேஷ்குமார், ஆதி திராவிடர் நல அலுவலர் வாசுதேவன், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சீனிவாசன் உள்ளிட்ட அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

The post மக்கள் குறைதீர் கூட்டத்தில் 18 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனைப்பட்டா appeared first on Dinakaran.

Related Stories: