ஈரோடு, ஜூலை 22: ஆடி மாதம் முகூர்த்தம் இல்லாததால், வாழை இலைகள் விற்பனை மந்தமாக காணப்படுகிறது.
ஈரோடு மாவட்டத்தில் கோபி, சத்தியமங்கலம், அந்தியூர், அத்தாணி, அம்மாபேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வாழை சாகுபடி அதிகளவில் செய்யப்படுகிறது. அப்பகுதிகளில் இருந்து, ஈரோடு வ.உ.சி பூங்கா மார்க்கெட் உள்ளிட்ட பல்வேறு மார்க்கெட்டுகளுக்கு வாழை இலைகள் வரத்தாகும்.
இந்நிலையில், ஆடி மாதம் முகூர்த்தம் இல்லாததால் வாழை இலைகள் விற்பனை குறைவாகவே காணப்படுகிறது. இலையின் விலையும் குறைவாக இருந்தாலும், அதனை வாங்குவதற்கு ஆளில்லை.
அதுமட்டுமின்றி, கோபி, சத்தியமங்கலம், அத்தாணி உள்ளிட்ட பகுதிகளில், கடந்த சில நாட்களாக மழை பெய்து வருவதால், வாழை இலை அறுவடை செய்வதும் நிறுத்தப்பட்டுள்ளது. தோட்டங்களில் வாழை இலைகளை அறுவடை செய்ய முடியாமல் விவசாயிகள் தவிர்த்து வருகின்றனர்.
குறிப்பாக, ஆடி மாதம் காற்று அதிகமாக வீசுவதால், வாழை இலை அதிகளவில் கிழிந்து வீணாகியுள்ளது. இதன் காரணமாக, விவசாயிகள், வியாபாரிகள் என பலரும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
The post ஆடி மாதம் எதிரொலி வாழை இலை விற்பனை மந்தம் appeared first on Dinakaran.
