காஞ்சிபுரம், ஜூலை 22: காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற வாராந்திர மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நேற்று கலெக்டர் கலைச்செல்வி மோகன் தலைமையில் நடந்தது. கூட்டத்தில், பொதுமக்களிடம் இருந்து 439 மனுக்களை பெற்று, அவற்றின் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள அனைத்துத்துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
அதன்படி, நேற்று நடைபெற்ற வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் இயங்கும் பள்ளிகளில் 2024-2025ம் கல்வியாண்டில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் சமூக அறிவியல் பாடத்தில் 100க்கு 100 மதிப்பெண் பெற்ற மவுலிவாக்கம் அரசு ஆதிதிராவிடர் மேல்நிலைப்பள்ளியில் பயிலும் மாணவிகள் சி.லீனா, எஸ்.பூஜா ஆகிய மாணவிகளுக்கு பரிசு பொருட்கள், கல்வி உபகரணங்கள் அடங்கிய தொகுப்புகள் மற்றும் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கினார்.
பின்னர், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் ஈமச்சடங்கிற்கான செலவினம் மற்றும் இயற்கை மரணமடைந்த மாற்றுத்திறனாளிகளின் வாரிசுதாரர்களுக்கு ரூ.5,83 லட்சம் மதிப்பிலான நிதியுதவிகள் வழங்கி, பொதுமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளிடம் மனுக்களை பெற்று, குறைகளை கேட்டறிந்தார்.
தொடர்ந்து, சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்ற விழாவில் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் பள்ளிப் புத்தாக்க மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் மாணவர்களின் புதிய கண்டுபிடிப்புகளை ஊக்கப்படுத்துவதற்காக, தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் சார்பில் மாநில அளவில் நடைபெற்ற போட்டியில் முதல் பரிசு பெற்ற காஞ்சிபுரம் வட்டத்திற்கு உட்பட்ட முசரவாக்கம் அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் குன்றத்தூர் வட்டத்திற்கு உட்பட்ட இரண்டாம் பரிசு பெற்ற சிறுகளத்தூர் அரசு உயர்நிலைப்பள்ளி குழுவினருக்கு வழங்கிய ரூ.1 லட்சம் மற்றும் ரூ.50 ஆயிரம் காசோலைகளை கலெக்டர் வழங்கி, வாழ்த்து பெற்றனர்.
வாழ்த்து பெற்ற தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் சார்பில், மாநில அளவில் நடைபெற்ற போட்டியில் வெற்றிபெற்ற முசரவாக்கம் அரசு மேல்நிலைப்பள்ளி, சிறுகளத்தூர் அரசு உயர்நிலைப்பள்ளி குழுவினர் “நிறைந்தது மனம்” திட்டத்தின் கீழ் தெரிவித்ததாவது:
பள்ளியில் பயிலும் மாணவர்களை ஆக்கப்பூர்வமாக சிந்திக்கவும், புதுமையான தீர்வுகளை உருவாக்கவும், தொழில் முனைவோர் திறன்களை வளர்க்கவும் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் சார்பில் புதிய கண்டுபிடிப்புகளை பாராட்டி, மாணவர்களை ஊக்கப்படுத்தி வருகின்றன.
இதன்மூலம் மாணவர்களுக்கு கற்றல் அனுபவங்கள் மற்றும் வழிகாட்டுதல் மூலம் ஆசிரியர்கள் எங்களை போன்ற மாணவர்களை ஊக்குவித்து, பள்ளிகளில் தொழில் முனைவு பயிற்சி அளிக்கப்பட்டு, புதிய கண்டுபிடிப்புகளுக்கு மாணவர்களை தயார் செய்கின்றனர்.
பள்ளியில் பயிலும் மாணவர்கள், கல்வியில் மட்டும் அல்லாமல், புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்குவதில் சிறந்து விளங்க வேண்டும் என்பதற்காக, பள்ளி புத்தாக்க மேம்பாட்டு திட்டத்தை, கொண்டு வந்து மாணவர்களை ஊக்குவித்து வரும் தமிழ்நாடு முதல்வருக்கு, எங்களின் நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம் என தெரிவித்தார்.
இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் வெங்கடேஷ், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஆர்த்தி, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) சத்யா, முதன்மைக் கல்வி அலுவலர் வெற்றிச்செல்வி, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் மலர்விழி, அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
The post தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் சார்பில் நடந்த மாநில அளவிலான போட்டியில் வென்ற மாணவர்களுக்கு பரிசு: கலெக்டர் வழங்கினார் appeared first on Dinakaran.
