திருவாரூர், ஜுலை 20: திருவாரூர் மாவட்டத்தில் முதலமைச்சர் மாநில விளையாட்டு விருது பெறுவதற்கு தகுதியுடையவர்கள் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் மோகனசந்திரன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது, ஆண்டுதோறும் பன்னாட்டு அளவிலும், தேசிய அளவிலும் பதக்கங்கள் பெற்று சிறந்து விளங்கும் 2 ஆண் மற்றும் 2 பெண் விளையாட்டு வீரர்கள், 2 சிறந்த பயிற்றுநர்கள், 2 சிறந்த உடற்கல்வி இயக்குநர் அல்லது உடற்கல்வி ஆசிரியர்களுக்கு முதலமைச்சர் மாநில விளையாட்டு விருது பரிசாக தலா ரூ.ஒரு லட்சம் மற்றும் ரூ.10 ஆயிரம் மதிப்பிலான தங்கப் பதக்கம் மற்றும் பாராட்டுப் பத்திரம் ஆகியவற்றை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை வழங்கி வருகிறது.
இது தவிர, விளையாட்டுப் போட்டிகளை நடத்தும் ஒரு நடத்துநர், ஒரு நிர்வாகி, ஒரு ஆதரவளிக்கும் நிறுவனம் மற்றும் ஒரு நன்கொடையாளர் (ரூ.10 லட்சத்திற்கும் அதிகமாக நன்கொடை அளித்தவர்), ஒரு ஆட்ட நடுவர் ஆகியோர்களுக்கு முதலமைச்சர் மாநில விளையாட்டு விருது ரூ.10 ஆயிரத்திற்கு மிகாமல் ஒரு தங்கப் பதக்கமும், ஒரு பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின்படி, 2024-25 மற்றும் 2025-26 ஆகிய 2 ஆண்டுகளுக்கான முதலமைச்சர் மாநில விளையாட்டு விருதுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதற்கு தகுதிகளாக தமிழ்நாட்டில் 3 ஆண்டுகளாக வசித்து வரும் தமிழ்நாட்டிற்காக இரண்டு முறை தமிழ்நாடு அணியின் சார்பாக கலந்து கொண்டு இந்தியாவின் சார்பாக விளையாடியவர்களாக இருக்க வேண்டும். இந்தியாவின் சார்பாக கலந்து கொண்டு தமிழ்நாட்டில் பணி நிமித்தம் குறைந்தது 5 ஆண்டுகளாக வசித்து வரும் முப்படை, ரயில்வே, காவல், அஞ்சல் மற்றும் தொலை தொடர்புத்துறை மற்றும் இதர துறைகளில் பணிபுரிபவர்கள் விண்ணப்பிக்கத் தகுதி பெறுவர். இரண்டாவது முறையாக ஒரு நபருக்கு இவ்விருது வழங்கப்பட மாட்டாது.
ஒருவர் காலமாகும் பட்சத்திலும், இவ்விருது வழங்கப்படும். விருதிற்கு முந்தைய 3 ஆண்டுகளில் விளையாட்டில் பெற்ற சிறந்த வெற்றிகளை இவ்விருதிற்காக கருத்தில் கொள்ளப்படும். 2024-&25ம் ஆண்டிற்கு, சிறந்த விளையாட்டு வீரர்கள், பயிற்றுநர்கள், உடற்கல்வி இயக்குநர் அல்லது உடற்கல்வி ஆசிரியர்கள் 01.04.2021 முதல் 31.03.2024 வரையிலும், ஆட்ட நடுவர், நன்கொடையானர், நிர்வாகி ஆகியோருக்கு 01.04.2022 முதல் 31.03.2024 வரையில் உள்ள ஆண்டுகள் கணக்கில் கொள்ளப்படும். மேலும், 2025-&26ம் ஆண்டிற்கு, சிறந்த விளையாட்டு வீரர்கள், பயிற்றுநர்கள், உடற்கல்வி இயக்குநர் அல்லது உடற்கல்வி ஆசிரியர்கள் 01.04.2022 முதல் 31.03.2025 வரையிலும், ஆட்ட நடுவர், நன்கொடையானர், நிர்வாகி ஆகியோருக்கு 01.04.2023 முதல் 31.03.2025 வரையிலும் உள்ள ஆண்டுகள் கணக்கில் கொள்ளப்படும்.
விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் தங்களது சான்றிதழ்களின் நகல்களை சான்றொப்பத்துடன் இணைத்து உரிய விண்ணப்பத்தில் விண்ணப்பிக்க வேண்டும். இவ்விருதிற்காக பரிந்துரை செய்யப்படுபவர்கள் மேற்காணும் விதிகளை ஏற்றுக் கொள்ள வேண்டும். மேலும் இவ்விருதிற்கு தகுதியான போட்டிகளாக ஒலிம்பிக் போட்டிகள், சர்வதேச ஒலிம்பிக் குழு அங்கீகாரத்துடன் சர்வதேச விளையாட்டு இணையத்தால் நடத்தப்படும் காமன்வெல்த் வாகையர் போட்டிகள் (4 ஆண்டுகளுக்கு ஒரு முறை, 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை மற்றும் ஆண்டு தோறும்), ஆசிய விளையாட்டுப் போட்டிகள், காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள், சர்வதேச ஒலிம்பிக் குழு அங்கீகாரத்துடன் சர்வதேச விளையாட்டு இணையத்தால் நடத்தப்படும் உலக வாகையர் போட்டிகள் (4 ஆண்டுகளுக்கு ஒரு முறை, 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை மற்றும் ஆண்டு தோறும்), தெற்காசிய விளையாட்டுப் போட்டிகள், தேசிய விளையாட்டுப் போட்டிகள், மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறையினால் அங்கீகரிக்கப்பட்ட தேசிய விளையாட்டு இணையம் நடத்தும் தேசிய வாகையர் போட்டிகள் ஆகும். அழைப்புப் போட்டிகள் மற்றும் மண்டலங்களுக்கு இடையேயான போட்டிகள் கருத்தில் கொள்ளப்படாது.
பன்னாட்டு அளவில் அங்கீகரிக்கப்பட்ட விளையாட்டுக்களில் பதக்கமும் அதாவது உலகக்கோப்பை, தெற்காசிய விளையாட்டு போட்டிகள், அங்கீகரிக்கப்பட்ட சம்பந்தப்பட்ட விளையாட்டு இணையங்களினால் நடத்தப்படும் தேசிய விளையாட்டுப் போட்டிகள் மற்றும் தேசிய சாம்பியன்ஷிப் போட்டிகளில் தனிநபர் போட்டிகளில் முதல் மூன்று இடங்களிலும் மற்றும் குழுப் போட்டிகளில் முதல் மற்றும் இரண்டாம் இடமும் பெற்றிருத்தல் வேண்டும். போட்டிகளில் பெற்ற வெற்றிகள் கருத்தில் கொள்ளப்படும்.
விருதுக்கு விண்ணப்பிக்கும் தலைசிறந்த விளையாட்டு வீரர்கள் தமிழ்நாடு விளையாட்டு கழகம், மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர், முதன்மை கல்வி அலுவலர், முதன்மை உடற்கல்வி ஆய்வாளர் மூலமாகவும், விளையாட்டுப் போட்டிகளை நடத்தும் நடத்துநர், நிர்வாகி, ஆதரவளிக்கும் நிறுவனம் மற்றும் நன்கொடையாளர், ஆட்ட நடுவர் ஆகியோர்கள் உரிய வழிமுறையாகவும் விண்ணப்பங்கள் உறுப்பினர் செயலர், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், ஜவஹர்லால் நேரு விளையாட்டரங்கம், பெரியமேடு, சென்னை – 600003 என்ற முகவரிக்கு ஆகஸ்ட் மாதம் 11ம் தேதிக்குள் அனுப்பி வைக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு கலெக்டர் மோகனசந்திரன் தெரிவித்துள்ளார்.
The post குறுவை சாகுபடி களை எடுக்கும் பணி முதலமைச்சர் மாநில விளையாட்டு விருது appeared first on Dinakaran.
