ஆனந்தூர் சிறப்பு முகாமில் மகளிர் உரிமை தொகை கேட்டு மனுக்கள்

ஆர்.எஸ்.மங்கலம், ஜூலை 20: உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம் நேற்று ஆர்.எஸ்.மங்கலம் அருகே உள்ள ஆனந்தூரில் 4 ஊராட்சி மக்கள் பயன் பெறும் வகையில் நடைபெற்றது. இத்திட்டத்தில் நகர்புறங்களில் நடைபெறும் முகாம்களில் 13 துறைகள் மூலமாக 43 சேவைகளும், கிராமப்புறங்களில் நடைபெறும் முகாம்களில் 15 துறைகள் மூலமாக 45 சேவைகளும் பெற முடியும். பொதுமக்கள் அனைத்து சேவைகளும் ஒரே இடத்தில் பெறும் வகையில் அனைத்து துறையினரும் முகாம் நடைபெறும் இடத்திற்கே வருகை தந்து பொதுமக்களுக்கு சேவை வழங்குவதால், இத்திட்டம் பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

ஆர்.எஸ்.மங்கலம் அருகே ஆனந்தூரில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற முகாமில் ஆனந்தூர், சிறுநா குடி, ராதானூர், சாத்தனூர் உள்ளிட்ட 4 ஊராட்சிகளுக்கு உட்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு இதில் மகளிர் உரிமைத்தொகை, பட்டா மாறுதல், கணினி திருத்தம், முதியோர் உதவித் தொகை, இலவச வீட்டுமனை பட்டா உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளுக்கு கோரிக்கை மனுக்களை அளித்தனர். இம்முகாமில் மாவட்ட வழங்கல் அலுவலர் மணிமாறன், வட்டாட்சியர் அமர்நாத், பிடிஓ கிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டு அவற்றை கணிணி மூலம் பதிவேற்றம் செய்தனர். இம்முகாமில், வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சி துறை, வேளாண்மைத் துறை, சமூக நலம் மற்றும் மகளிர் உரிமை துறை, மருத்துவத்துறை உள்ளிட்ட பிற துறை சார்ந்த அலுவலர்களும், அப்பகுதி பொதுமக்களும் கலந்து கொண்டனர்.

The post ஆனந்தூர் சிறப்பு முகாமில் மகளிர் உரிமை தொகை கேட்டு மனுக்கள் appeared first on Dinakaran.

Related Stories: